அரசியல் களம்

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம்: புதுவையில் கூட்டணி அமைத்தது தவெக

புதுவையில் தவெக தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக கூட்டணி அமைத்துள்ளது.

புதுவை,

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சி, புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக முதலில் அறிவித்திருந்தது. வேட்பு மனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால், நேற்று இரவு 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிட்டார். இந்த நிலையில், திடீர் திருப்பமாக த.வெ.க.வுடன் ‘நேயம் மக்கள் கழகம்’ என்ற கட்சி கூட்டணி அமைத்துள்ளது.இதுதொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ‘நேயம் மக்கள் கழகம்’ நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் ‘உருளையன்பேட்டை’ மற்றும் ‘தட்டாஞ்சாவடி’ ஆகிய இரண்டு தொகுதிகள், கூட்டணியில் இணைந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்