திருவள்ளூர்,
திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:-
தவெக தலைவர் விஜய் அவர்கள் தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்று சொல்லிவருகிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நடிகர் விஜய் அறியாமலும், புரியாமலும் பேசிவருகிறார். அரசியல் புரிதல் என்பது அவ்ருக்கு கொஞ்சம் கூட இல்லை. அதிமுக ஏழு முறை ஆட்சியில் இருந்த மிகப்பெரிய கட்சி, பிரதான எதிர்கட்சியாக இன்று இருக்கிறது.
அதிமுகவை ஒரு போதும் புறந்தள்ளி விடமுடியாது, புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சிதலைவி ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா இவர்களின் படத்தை மட்டும் போட்டு கொண்டால் போதுமா? இவர்கள் எங்கள் கட்சியை தொடங்கியவர்கள், எங்கள் இயக்கத்தை வளர்த்தவர்கள். அண்ணா எங்கள் கட்சி கோட்பாட்டில், கட்சி பெயரில், கட்சி கொடியில் இருக்கிறார். புரட்சி தலைவர் எம்ஜிஆர்-ஆல் உருவாக்கபட்ட இயக்கம் அதிமுக.
அதிமுக கட்சியை அரை நூற்றாண்டு காலம் அழைத்துவந்து அரசியல் வரலாற்றை எழுதியவர் புரட்சிதலைவி அவர்கள், இந்த மூன்று பெரும் தலைவர்களின் புகைப்படங்களை கடன்வாங்கி வைத்திருக்கும் விஜய் அதிமுகவை பற்றி பேசுவது அவரது அறியாமையை காட்டுகிறது.
சசிகலா புது கட்சி தொடங்கியிருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு அதிமுக என்பது பெரிய மலை; இந்த மலையின் மீது மோதினால் மண்டை தான் உடையும். அரை நூற்றாண்டு காலமாக அதிமுகவில் இருந்த கே.ஏ. செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றுள்ளதால் அதிமுக ஓட்டுக்களும் தவெகவிற்கு வரும் என்று அவர்கள் நினைப்பது பகல் கனவாக தான் இருக்கும் என்று பேசினார்.