அரசியல் களம்

குமரி மாவட்டத்திற்கு 12-ந்தேதி விஜய் வருகை; 6 மணி நேரம் பிரசாரத்திற்கு அனுமதி

மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை 6 மணி நேரம் மட்டுமே கூட்டத்தை நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

தமிழக வெற்றி கழகம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் அக்கட்சியின் தலைவர் விஜய், தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியாக சென்று அவர் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, விஜய் அவர்கள் வருகிற நாளை மறுநாள் (12-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார்.கன்னியாகுமரி அருகே உள்ள விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி அக்கட்சியின் நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு அளித்திருந்தனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கோரப்பட்ட நிலையில், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை 6 மணி நேரம் மட்டுமே கூட்டத்தை நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

விஜய்யின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்வதற்காக அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் நாளை (11-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்றனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்க உள்ளனர்.