தூத்துக்குடி,
தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக விளம்பர ஆட்சி தான் நடந்து வருகிறது. இவ்வளவு பிரச்சினை நடக்கும்போது, முதல்-அமைச்சர் ரீல்ஸ் போட்டுக் கொண்டு இருக்கிறார். இந்துக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். 4 ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி உள்ளதாக சொல்கின்றனர். ஒரு குடமுழுக்கு விழாவிலும் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தை பா.ஜனதா கூட்டணியில் இணைப்பதற்கு நாங்கள் யாருக்கும் தகவல் அனுப்பவில்லை. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட் டணி இயல்பாக அமைந்து உள்ளது. எங்களை பொறுத்தவரை யாருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டியது இல்லை. தி.மு.க.வை யாரெல்லாம் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களை கூட்டணியில் நாங்கள் சேர்த்து இருக்கிறோம்.
வரும் தேர்தலில் நான் போட்டியிடுவது என்பது கட்சி தலைமை மற்றும் " தமிழக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு இருக்கும். பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும். அதில் தமிழ் நாட்டு மக்களின் தேவைக்கான சிறந்த திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.