அரசியல் களம்

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா? - மாலை 4 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு

தவெக ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

தவெகவின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. அதே சமயம், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும் ஐ.யூ.எம்.எல். அறிவித்தது.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்தது. முதலில், இன்று காலை 10 மணிக்கு திருமாவளவன் செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு மேலும் தாமதமாகிறது.

அதாவது, மாலை 4 மணிக்கு திருமாவளவன் தனது முடிவினை அறிவிப்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்கும் என்று திருமாவளவன் கூறும் பட்சத்தில், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை தவெக பெறும். அதன் அடிப்படையில் விஜய் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். இதற்காக தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, ஆட்சி, அதிகாரத்தில் விசிக பங்கு கேட்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. விசிகவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படுமா? அல்லது வேறு ஏதாவது பதவி கொடுக்கப்படுமா என்பது இன்று மாலை தெரிந்துவிடும். இவ்வாறு தமிழகத்தில் தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.

அதே நேரம், விசிக அலுவலகத்திற்கு விஜய் நேரில் வருகை தர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விசிக அலுவலகம் முன்பு தவெக தொண்டர்கள் மற்றும் விசிக தொண்டர்கள் பலர் திரண்டுள்ளனர். இதனால் அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.