சென்னை,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் கைகளில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழிக்கும் சானிடைசர் எனும் கிருமிநாசினி முக்கியத்துவம் பெற்று வருகிறது.
வெளியே எங்கு சென்றாலும் சானிடைசர் குப்பி இல்லாமல் மக்கள் செல்வது கிடையாது. அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றால் கூட கையடக்க கிருமிநாசினி டப்பாவை கொண்டு செல்கிறார்கள். அந்த வகையில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களிலும் சானிடைசர் குப்பி தவறாமல் இடம்பிடிக்கும் பொருளாக மாறியிருக்கிறது. டூல் பாக்ஸ்களுக்கு இணையான முக்கியத்துவத்தை சானிடைசர் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
அலுவலகத்துக்கு செல்லும் போது அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சரிபார்த்து எடுத்து செல்வது போல சானிடைசரையும் பத்திரமாக எடுத்து செல்ல வேண்டியுள்ளது. அதேபோல ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வரவேற்கும் பொருளாக சானிடைசர் காட்சி தருவதையும் பார்க்க முடிகிறது.