நாம் அனுப்பும் ஒரு சின்ன மெசேஜ் கூட, எதிர்பாராத அளவுக்கு நம்முடைய மனநிலையை வெளிப்படுத்தும் என்பது உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? நெருக்கமான ஒருவரிடமிருந்து 'ஓ.கே' என்று இரண்டு வார்த்தைகளில் பதில் வந்தால், அது உண்மையிலேயே 'ஓ.கே' என்ற அமைதியைத் தருகிறதா...? இல்லை அந்தச் சிறிய பதிலுக்குள் சொல்லப்படாமல் இருக்கும் ஒரு வருத்தமோ, ஒரு சின்ன கோபமோ இருக்கிறதா...?
இது வெறும் ஓவர் திங்கிங்' அல்ல; இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் இயல்பாக உருவான ஒரு உணர்வு. "மெசேஜ்கள் இப்போது ஒரு மொழியாக மாறிவிட்டன என்று” உளவியல் நிபுணர்களும் இதையே சொல்கிறார்கள். ஆம்... தமிழ், ஆங்கிலம் போலவே, டெக்ஸ்டிங்கும் (Texting) இன்று ஒரு உணர்வு மொழி. நாம் எப்படி பேசும்போது உணர்வுகளை வெளிப்படுத்துகிறோமோ, அதேபோல் மெசேஜ்களிலும் அவை மெதுவாக தெரிகின்றன. வழக்கமாக நீளமாக எழுதுபவர் திடீரென 'ஓ.கே', 'ஃபைன்'. 'தாங்க்ஸ்' என்று மட்டும் அனுப்பினால், அந்தச் சுருக்கமான பதிலில் கூட ஒரு மாறுபாடு நமக்குத் தெரியும். சொல்லப்படாத ஒரு இடைவெளி அங்கே உருவாகிறது.
எமோஜிகளும் இதே கதையைத் தான் சொல்கின்றன. வார்த்தைகளை மென்மையாக்கும் ஒரு புன்னகை போல அவை செயல்படுகின்றன. எப்போதும் எமோஜிகளுடன் மெசேஜ் அனுப்பும் ஒருவர் திடீரென அவற்றை தவிர்த்துவிட்டால், அந்த மாற்றத்தை நாம் உணராமல் இருக்க முடியாது. சொல்லாமல் சொல்லும் அந்த சிறிய வித்தியாசம், உறவில் ஒரு மென்மையான தூரத்தை உணர்த்தும்.
மெசேஜ் அனுப்பும் வேகமும் ஒரு மொழிதான். உடனே வரும் பதில் அக்கறையையும், சில நேரங்களில் பதற்றத்தையும் காட்டலாம். தாமதமாக வரும் பதில் பிசியாக இருப்பதை குறிக்கலாம்... அல்லது அந்த உரையாடலில் ஒரு சிறிய தூரத்தை உருவாக்கி இருக்கலாம். அதேபோல், சாதாரணமாக சுலபமாக எழுதுபவர் திடீரென கவனமாக, முழுமையாக டைப் செய்தால், “இது முக்கியம்” என்ற ஒரு அமைதியான சைகை அதில் இருக்கும்.
இதனால், டெக்ஸ்டிங் என்பது வெறும் தகவல் பரிமாற்றம் அல்ல. அது நம்முடைய மனதின் ஒரு சிறிய பிரதிபலிப்பு. நாம் எப்போது பதில் அனுப்புகிறோம், எப்படி எழுதுகிறோம், என்ன சேர்க்கிறோம், என்ன தவிர்க்கிறோம்... இவை எல்லாம் சேர்ந்து, நம்மைப் பற்றிய ஒரு கதையை அமைதியாகச் சொல்லிக் கொண்டே இருக்கும்.
நாம் அனுப்பும் மெசேஜ்கள் நம்முடைய உண்மையான உணர்வுகளைத் தான் எடுத்துச் செல்கிறதா..? அல்லது நமக்கு தெரியாமலே வேறு ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறதா...? இதைப் புரிந்து கொண்டால், உறவில், நட்பில், காதலில்... விரிசல் வராது.