பிரம்மாண்டமான உடல் அமைப்பைக் கொண்ட யானையின் கண்கள், அதன் உடலுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியதாகவே காணப்படுகின்றன. யானையின் கண் விட்டம் சுமார் 3.8 செ.மீ. (1.5 அங்குலம்) அளவில் இருக்கும். இது மனிதர்களின் கண்களை விட சற்று பெரியதாக இருந்தாலும், யானையின் உடல் அளவுடன் ஒப்பிடும்போது சிறியதாகும். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, யானைகள் பார்வையைவிட மோப்பம் மற்றும் கேட்கும் திறனை அதிகம் நம்பி வாழும் உயிரினம் ஆகும்.
யானையின் தும்பிக்கையில் ஆயிரக்கணக்கான தசைகள் உள்ளன. இதன் மூலம் தொலைவில் உள்ள உணவு மற்றும் நீரின் இருப்பிடத்தைக் கூட மோப்பம் பிடித்து கண்டறிய முடியும்.
யானைகளின் கண்களில் மனிதர்களுக்கு இருப்பதுபோன்று மேல் மற்றும் கீழ் இமைகளுடன், மூன்றாவது கண் இமை எனப்படும் தனித்துவமான அமைப்பும் உள்ளது. இது கண்ணின் உட்புறத்தில் இருந்து வெளிப்புறமாக நகர்ந்து, கண்ணை மூடி பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறது. இந்த மூன்றாவது இமை, யானைகளுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. அடர்ந்த காடுகள் மற்றும் புதர்கள் வழியாக யானைகள் செல்லும்போது, மரக்கிளைகள், இலைகள் மற்றும் தூசுகள் கண்களுக்குள் செல்வதைத் தடுக்கிறது.
அதேபோல், யானைகள் சேறு மற்றும் தூசியை உடலில் வாரி இறைத்துக் கொள்ளும் நேரங்களிலும், மணல், அழுக்கு மற்றும் சிறு குப்பைகள் கண்களுக்குள் புகாமல் இந்த மூன்றாவது இமை பாதுகாப்பு கேடயமாக செயல்படுகிறது.
மேலும், யானைகளின் பார்வை மனிதர்களைப் போல முழுமையான நிறங்களைப் பிரித்தறியும் திறன் கொண்டதல்ல. குறிப்பாக சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை வேறுபடுத்துவதில் அவற்றுக்கு சிரமம் உள்ளது. அதேசமயம், மங்கலான வெளிச்சத்தில் நகரும் பொருட்களை கண்டறியும் திறன் அவற்றுக்கு சிறப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, யானையின் கண்கள் சிறியதாக இருப்பது குறைபாடு அல்ல. அதன் வாழ்வியல் தேவைகளுக்கு ஏற்ப பார்வை மற்றும் கண் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் இயற்கை கொடுத்த வரமாக அமைந்துள்ளது.