புதுடெல்லி
மே மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 2.9 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
1.22 கோடி பயணிகள்
மே மாதத்தில் உள்நாட்டு விமான சேவையை மொத்தம் 1.22 கோடி பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1.18 கோடியாக இருந்தது. ஆக, பயணிகள் எண்ணிக்கை 2.9 சதவீதம் உயர்ந்துள்ளது. முந்தைய மாதத்தில் அது 1.09 கோடியாக இருந்தது. அது 55 மாதங்களில் இல்லாத பின்னடைவாக கருதப்பட்டது.
மே மாதத்தில் இண்டிகோ விமானங்களில் அதிகபட்சமாக 59.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த வகையில் இந்நிறுவனம் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்து ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் 18.03 லட்சம் பேர் பயணம் செய்து இருக்கின்றனர். இதன்படி இந்நிறுவனம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
ஏர் இந்தியா விமானங்களில் 16.53 லட்சம் பேர் (மூன்றாவது இடம்) பயணம் செய்து உள்ளனர். முந்தைய மாதத்தில் (ஏப்ரல்) ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை முறையே 15.20 லட்சம் மற்றும் 14.40 லட்சமாக இருக்கிறது.
அதிக அளவு இருக்கைகள் நிரம்பிய வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் விமான இருக்கைகள் அதிகபட்சமாக 93.90 சதவீதம் நிரம்பி இருக்கிறது. கோ ஏர் விமானங்களின் இருக்கைகள் 93.30 சதவீதம் நிரம்பி உள்ளது. இண்டிகோ விமானங்களில் 90.90 சதவீத இருக்கைகள் நிரம்பி இருக்கிறது.
குறித்த நேரத்தில் அதிக சேவைகளை வழங்கிய வகையில் கோ ஏர் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 91.80 சதவீத சேவைகளை குறித்த காலத்தில் வழங்கி உள்ளது. அடுத்து ஏர் ஏஷியா நிறுவனத்தின் விமானங்கள் 89.10 சதவீத சேவைகளை சரியான நேரத்தில் வழங்கி இருக்கின்றன. இண்டிகோ நிறுவனம் (87.40 சதவீத சேவைகள்) மூன்றாவது இடத்தில் இருக் கிறது.
சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
16 சதவீத வளர்ச்சி
சென்ற நிதி ஆண்டில் (2018-19), உள்நாட்டு விமான சேவையை மொத்தம் 12.67 கோடி பயணிகள் பயன்படுத்தி இருக்கின்றனர். முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 16 சதவீத வளர்ச்சியாகும். அப்போது பயணிகள் எண்ணிக்கை 10.87 கோடியாக இருந்தது.
2018 காலண்டர் ஆண்டில் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 18.6 சதவீதம் உயர்ந்து 13.89 கோடியாக அதிகரித்து இருக்கிறது. 2017-ஆம் ஆண்டில் அது 11.71 கோடியாக இருந்தது.