நியூயார்க்
செவ்வாயில் இருந்து கியூரியாசிட்டி ரோவர் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் உள்ள கதவு போன்ற அமைப்பானது, வேற்றுகிரகவாசிகள் வாழ்கின்றனரா? என்ற பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கடந்த ஜூலை மாதம் பல புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. அதில், செவ்வாய் கோளின் மவுண்ட் ஷார்ப் பகுதிகள் படம் பிடிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இந்த புகைப்படங்கள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு பெரிய புகைப்படம் உருவாக்கப்பட்டது.
அது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது ஒரு கதவு என சிலர் கூறுகின்றனர். இதனால், செவ்வாயில் வேற்றுகிரகவாசிகளின் நாகரீகம் உள்ளது என சமூக ஊடக தகவல்கள் பரவ தொடங்கியுள்ளன.
கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து செவ்வாயில் உள்ள காலே பள்ளத்தில் இந்த ரோவர் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில், மவுண்ட் ஷார்ப் பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மண் ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறது. அதில், மவுண்ட் ஷார்ப் என்பது 3 மைல் உயரம் கொண்ட மலை பகுதியாகும்.
பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்வாயில், நுண்ணுயிரிகள் எதுவும் வசித்து வருகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்து தீர்மானிக்கும் இலக்குடன் ரோவர் செயல்பட்டு வருகிறது. ஏறக்குறைய 14 ஆண்டு கால ஆய்வில் பல்வேறு முறை பல புகைப்படங்களை நமக்கு தந்து வருகிறது.
இந்த தருணத்தில் இந்த புதிய புகைப்படமும் எடுக்கப்பட்டு உள்ளது. இது விஞ்ஞானிகள் இடையே ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், மறைந்து போன நாகரீகம் எதுவும் செவ்வாயில் இருந்திருக்க கூடும் என்றும் அதனுடன், வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கை பற்றிய பரபரப்பும் தொற்றி கொண்டது.
இதுபற்றி பறக்கும் தட்டு ஆய்வாளரான ஸ்காட் வேரிங் கூறும்போது, இந்த புகைப்படத்தில் உள்ள பொருள் ஒரு கதவு போன்று காணப்படுகிறது. 6.6 அடி உயரம் மற்றும் 3.3 அடி அகலம் கொண்டுள்ளது என்றார். ஆனால், கதவின் இந்த அளவுகளை அவர் எப்படி அளந்து எடுத்துள்ளார்? என தெரியவில்லை.
இந்த புகைப்படம் பற்றி நாசா கூறும்போது, செவ்வாய் கோளில் வேற்றுகிரகவாசிகளின் வாழ்க்கை உள்ளது என்றோ அல்லது பழமையான நாகரீக சமூகம் வாழ்கிறது என்பதற்கான உறுதியான சான்றுகளோ இதுவரை கண்டறியப்படவில்லை என கூறுகிறது.