5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மரக்கிளையில் வரையாடு ஒன்று நின்று கொண்டிருந்த காட்சி. 
சிறப்புக் கட்டுரைகள்

5 ஆயிரம் அடி உயரத்தில் மரக்கிளையில் நின்றபடி சுற்றுலா பயணிகளை மெய்சிலிர்க்க வைத்த வரையாடு

மூணாறு அருகே உள்ள ராஜமலைப்பகுதியில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல், ராஜமலை பகுதியில் வரையாடுகள் நடமாடி கொண்டிருக்கின்றன. அவைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.

அதேநேரத்தில் சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் சில வரையாடுகள், தன்னை அறியாமலேயே சாகசத்திலும் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. அதன்படி நேற்று முன்தினம் வரையாடு ஒன்று சுற்றுலா பயணிகளை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.

அதாவது வாட்டி வதைக்கும் குளிர் வரையாடுகளையும் விட்டு வைக்கவில்லை. இதனால் குளிர் காய்வதற்காக, சூரிய ஒளியை தேடி வரையாடுகள் செல்கின்றன. அந்த வகையில் சூரிய ஒளி தென்பட்ட 5 ஆயிரம் அடி உயரத்துக்கு ஒரு வரையாடு சென்று விட்டது. மலைச்சரிவில் உள்ள பாறையில் ஏறிய அந்த வரையாடு, அங்கு துளிர்விட்டிருந்த மரக்கிளையில் ஏறியது. அந்தரத்தில் மரக்கிளையில் நின்றபடி குளிர் காய்ந்து கொண்டிருந்தது.

கர்ணம் தப்பினால் மரணம் என்பதை அறியாமல் 5 ஆயிரம் அடி உயரத்தில், மரக்கிளையில் வரையாடு ஒன்று ஒய்யாரமாய் நின்ற காட்சியை கண்ட சுற்றுலா பயணிகள் வியப்பின் உச்சத்துக்கே சென்று விட்டனர்.