தங்கள் நாடுகளில் குவிந்துள்ள பெருமளவிலான குப்பைக் குவியல்களை அகற்றுவதற்கே பெரும்பாலான நாடுகள் திணறும் நிலையில்,சுவீடன் பக்கத்து நாடுகளில் இருந்து குப்பையை இறக்குமதி செய்து வருகிறது.
விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் சுவீடன் மற்ற நாடுகளிலிருந்து டன் கணக்கில் குப்பையை இறக்குமதி செய்து, அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துகிறது.
சுவீடன் கடுமையான குளிர்காலம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். எனவே தனது மிகப் பெரிய அளவிலான வெப்பமூட்டும் அமைப்பை இயக்குவதற்கு, இறக்குமதி செய்யப்பட்ட கழிவு களையே பயன்படுத்துகிறது.
குப்பைகளை எரிப்பதால் உருவாகும் அளவற்ற வெப்பம், நிலத்தடிக் குழாய்களின் ஒரு பரந்த வலையமைப்பு மூலம் லட்சக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால், கடுமையான குளிர்காலத்திலும் வீடுகள் கதகதப்பாக இருக்கின்றன.
இறக்குமதி செய்யப்படும் குப்பைகள் பெருமளவில் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுகின்றன. மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் சிறப்பு உலைகளில் மிக அதிக வெப்பநிலையில் எரிக்கப்படுகின்றன. இந்தச் செயல்முறை 'இன்சினரேஷன்' என்று அழைக்கப்படுகிறது.
இதன் மூலம் உருவாகும் அபரிமிதமான ஆற்றல் மின் சாரமாக மாற்றப்பட்டு, சுவீடனில் உள்ள லட்சக்கணக்கான வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வழங்கப்படுகிறது.
வெப்பம் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்வதைத்தவிர, சுவீடன் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகளையும் அமைக்கிறது. குப்பைகளைச் சிறப்பாக கையாளும் சுவீடனுக்கு, குப்பைகள் மூலமாகக் கூடுதல் ஆதாயமும் கிடைக்கிறது.
எப்படி தெரியுமா..? குப்பைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்கள் கழிவுகளை எடுத்துக்கொள்வதற்காக சுவீடனுக்குப் பணம் செலுத்துகின்றன. சில நாடுகள் பணத்திற்கு ஈடாக இலவச எரிபொருள் மற்றும் ஆற்றலை அனுப்புகின்றன.