image credits: ai 
சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவிலே இருந்தாலும் இந்த 4 மாநிலங்களுக்கு முன் அனுமதி இல்லாமல் போக முடியாது? ஏன் தெரியுமா?

இந்த குறிப்பிட்ட 4 மாநிலங்களுக்கு செல்ல ‘இன்னர் லைன் பெர்மிட்’ (ILP) எனப்படும் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டிய நிலை உள்ளது.

இந்தியாவுக்குள் பயணம் செய்தாலும் சிறப்பு அனுமதி

இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல பொதுவாக எந்தவித முன் அனுமதியும் தேவையில்லை. ஆனால் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களுக்குச் செல்லும் பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள், ‘இன்னர் லைன் பெர்மிட்’ (ILP) எனப்படும் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டிய நிலை உள்ளது.

விசா போன்றது அல்ல

ILP என்பது விசா போன்றதல்ல. சுற்றுலாவுக்குத் தடை விதிப்பதும் இதன் நோக்கமல்ல. குறிப்பிட்ட காலத்துக்கு அந்த மாநிலத்துக்குள் சென்று தங்குவதற்கான அரசு அனுமதி மட்டுமே. கட்டணம், அனுமதியின் செல்லுபடியாகும் காலம், விண்ணப்பிக்கும் நடைமுறை ஆகியவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு

இந்த நடைமுறைக்கு 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளது. 1873-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறை’ மூலம் ‘இன்னர் லைன்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெளிநபர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

சுற்றுலா செல்லும் முன் கவனம்!

அவர்களின் நிலம், கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதுடன், நில அபகரிப்பைத் தடுப்பதும் இதன் நோக்கங்களாகும். சுதந்திரத்துக்குப் பிறகும் இந்த நடைமுறை தொடர்கிறது. எனவே, இந்த மாநிலங்களுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிடுபவர்கள் டிக்கெட், ஹோட்டல் முன்பதிவு செய்வதுடன், ILP அனுமதி தேவையா என்பதையும் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது அவசியம்.

முக்கிய சுற்றுலாத் தலங்கள்

அனுமதி தேவை என்றாலும், இந்த மாநிலங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்க புரியாக உள்ளன. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மடாலயம், சேலா பாஸ், நூரனாங் நீர்வீழ்ச்சி, பும்லா பாஸ் ஆகியவை முக்கிய இடங்களாகும்.

நாகாலாந்தில் கொஹிமா, டிசுகோ பள்ளத்தாக்கு (Dzukou Valley) மற்றும் புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா ஆகியவை கவனம் ஈர்க்கின்றன. மிசோரத்தில் வென்டாவங் நீர்வீழ்ச்சி, தம்டில் ஏரி போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் உள்ளன. மணிப்பூரில் லோக்டக் ஏரி, கெய்புல் லம்ஜாவ் தேசியப் பூங்கா, ஷிருய் மலைப்பகுதி ஆகியவை முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளன.

Image credits: AI