சுதந்திர இந்தியாவின் முதல் தேசியக்கொடி உருவான இடம்! வேலூர் குடியாத்தம் நெசவாளர்களின் வரலாற்று சாதனை
இந்திய நாடு அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றபோது, டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக்கொடி தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நெய்யப்பட்டதுதான் என்ற வரலாற்று பெருமிதம் தற்போது அசைக்க முடியாத சான்றுகளுடன் வெளிவந்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 1932-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் நகராட்சித் தலைவராக பதவி வகித்தவர் ஆர். வெங்கடாசலம். அன்றைய காலகட்டத்தில் நெசவு தொழிலில் சிறந்து விளங்கிய இவரை, டெல்லியில் இருந்து வந்த மத்திய அரசு அதிகாரி ஒருவர் அவசரமாக அணுகியுள்ளார். நாடு சுதந்திரம் அடைவதையொட்டி, நாடு முழுவதும் விநியோகிக்க சுமார் 1 கோடி தேசிய கொடிகளை தயாரித்து தருமாறு பெரிய ஒப்பந்தம் ஒன்றை வழங்கியுள்ளார்.
கால அவகாசம் மிகவும் குறைவாக இருந்தபோதிலும், ஆர். வெங்கடாசலம் தலைமையில் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் இந்த தேசப்பணியில் களம் இறங்கினர். அவர்கள் இரவு, பகல் பாராமல், கொடிகளை நெய்ய தொடங்கினர்.
பொதுமக்களுக்கான கொடிகள் தவிர, டெல்லி செங்கோட்டையில் ஏற்றுவதற்காகவே பிரத்யேகமாக 12 அடி அகலமும், 18 அடி நீளமும் கொண்ட 3 பிரம்மாண்டமான கொடிகள் மிக மெல்லிய துணியில் நெய்யப்பட்டன. இந்த 3 கொடிகளும் டெல்லிக்கு அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் ஒரு கொடிதான் 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் டெல்லி செங்கோட்டையில் கம்பீரமாக ஏற்றி வைக்கப்பட்டது என்று வரலாற்று சான்றுகள் திட்டவட்டமாக கூறுகின்றன.
குடியாத்தம் நெசவாளர்களின் இந்த அசாத்திய உழைப்பை பாராட்டி, 1947 ஆகஸ்ட் 12-ம் தேதியே பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அலுவலகத்தில் இருந்து ஆர். வெங்கடாசலத்திற்கு அதிகாரப்பூர்வப் பாராட்டு மற்றும் நன்றி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், டெல்லிக்கு அனுப்பப்பட்டது.
குடியாத்தத்தில் நெய்யப்பட்ட மற்றொரு பிரம்மாண்ட கொடி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையிலும் ஏற்றப்பட்டது. அந்த கொடி இன்றும் சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.