இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சினைகள் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாகும். ஆனால், இதையெல்லாம் கடந்து, சீன மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்து, அந்நாட்டு பாடப்புத்தகங்களில் ஒரு மாபெரும் ஹீரோவாக போற்றப்படுகிறார் ஒரு இந்தியர்!
மராட்டிய மாநிலம் சோலாபூரில் பிறந்த டாக்டர் துவாரகநாத் கோட்னிஸ் சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இவருக்கு எழுப்பப்பட்டுள்ள வெண்கல சிலைகளுக்கு முன்னால், இன்றும் சீன பள்ளிக்குழந்தைகளும் மருத்துவ மாணவர்களும் தலைவணங்கி, அவர் பெயரால் உறுதிமொழி எடுத்து வருவது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1938-ஆம் ஆண்டு சீனா மீது ஜப்பான் நாடு இரக்கமின்றிப் போர் தொடுத்தது. அந்த இக்கட்டான காலகட்டத்தில், சீன அதிபரின் வேண்டுகோளை ஏற்று, இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட மருத்துவக் குழு சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஒரு இளம் துடிப்புள்ள 28 வயது அறுவை சிகிச்சை நிபுணராக களம் இறங்கினார்.
போர்க்களத்தில் குண்டுகள் மழையென பொழிந்து கொண்டிருக்க, ரத்த வெள்ளத்தில் துடித்த சீன வீரர்களை காப்பாற்ற டாக்டர் கோட்னிஸ் அஞ்சாமல் பணியாற்றினார். போர்க்களத்தின் முன்வரிசைக்கே நேரடியாக சென்று, மருந்துகள் தட்டுப்பாடு நிலவிய சூழலிலும், கையில் கிடைத்த மருத்துவ கருவிகளை கொண்டு உயிரை காக்கும் போரில் ஈடுபட்டார்.
கடந்த 1940-ஆம் ஆண்டு நடந்த ஒரு பயங்கரமான போரின்போது, தொடர்ந்து 72 மணி நேரம் (3 நாட்கள்) கண் இமைக்காமல், தூக்கத்தை தொலைத்து நூற்றுக்கணக்கான சீன வீரர்களுக்கு அவர் அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார். இடையில் தன் தந்தையின் மரண செய்தி வந்தபோதும், தாய்நாடு திரும்பாமல் தன் கடமையே கண்ணாக சீன மண்ணிலேயே தங்கி சேவையாற்றினார்.
தொடர் உழைப்பு, போதிய தூக்கமின்மை மற்றும் கடுமையான நச்சு தொற்று பாதிப்பு காரணமாக, டாக்டர் கோட்னிஸின் உடல்நிலை மிக மோசமடைந்தது. சீன நர்ஸ் ஒருவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கோட்னிஸ், தன் கடமையின் பாதையிலேயே பயணித்து, கடந்த 1942-ஆம் ஆண்டு, தன் 32-வது இளம் வயதிலேயே சீன மண்ணில் தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.
அவரது மறைவு செய்தியை கேட்டு ஒட்டுமொத்த சீன ராணுவமும் கதறி அழுதது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் மாவோ ஜெடாங், தன் சொந்த கையால் இரங்கல் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், "நம் ராணுவம் ஒரு சிறந்த வலது கரத்தை இழந்துவிட்டது, நம் தேசம் ஒரு உன்னத நண்பனை இழந்துவிட்டது" என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.
சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்த பிறகு, அங்கு வருகை தந்த ஒவ்வொரு சீன அதிபர்களும், பிரதமர்களும் இந்தியா வரும்போது மும்பையில் உள்ள டாக்டர் கோட்னிஸின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதை ஒரு மரபாகவே வைத்துள்ளனர். சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இவருக்காக பிரம்மாண்ட நினைவு இல்லமும், மருத்துவ கல்லூரியின் வெளியே கம்பீரமான வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் தங்களின் முன்னோர்களை நினைவுகூரும் திருநாளில், இந்த இந்திய மருத்துவரின் (கல்லறைக்கு) வந்து மலர்களைத்தூவி, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறார்கள். எல்லைகளையும் மொழிகளையும் கடந்து, மனிதநேயமே உலகப்பொது மறை என்பதை உலகிற்கு உணர்த்திய டாக்டர் கோட்னிஸின் புகழ், சீன மண்ணில் வெண்கலச் சிலையாக என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்.