கராச்சி
பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உதவ என்னால் முடியாது என வாசிம் அக்ரம் ஏன் கூறினார்? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று உள்ளது. 3-வது போட்டி இன்று தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் பிரபல முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசும்போது, தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணியிடம் 3-0 என்ற கணக்கில் நாங்கள் தோற்க போகிறோம் என்று எனக்கு தெரியும். இது ஒன்றும் ஆச்சரியம் தரும் விசயமல்ல என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இதனால், 3-வது போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்ற கணிப்பை அக்ரம் வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு அவர் கூறும் விளக்கம், எங்களுடைய தரப்பில் பேட்டிங்கில் திணறல் காணப்படுகிறது. பந்து வீச்சு சராசரிக்கும் கீழ் உள்ளது. பீல்டிங் படுமோசம் என்ற அளவில் உள்ளது. இது ஒன்றும் ராக்கெட் அறிவியல் அல்ல என்றார்.
2-வது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் 7 வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் அவருடைய உதவியாளரையும் அணி நிர்வாகம் நீக்கியது. இது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, வீரர்களுக்காக நான் வருந்துகிறேன். அதே நேரத்தில் அவர்கள் நடந்து கொள்ளும் விதமும் சிக்கலை ஏற்படுத்துகிறது என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, நீங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உதவ முடியுமா? என நிறைய முறை என்னிடம் கேட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு என்னால் உதவ முடியும் என நான் நினைக்கவில்லை. நான் ஒருவன் மட்டுமே முயற்சிகளை போட்டு சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும் என நினைக்கவில்லை. ஏனெனில் விவகாரங்கள் பெரிய அளவில் உள்ளன என்றார்.
வீரர்களிடமோ அல்லது வாரியத்திடமோ மட்டுமே சிக்கல் இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. எனினும், அணியிலுள்ள சில வீரர்களின் மனநிலை சிக்கல்களை உருவாக்குகிறது என ஒப்பு கொள்கிறேன்.
ஆனால், பாகிஸ்தானில் ஒரு விசயம் கூறப்படுவதுண்டு. இரண்டு கைகளை கொண்டே நீங்கள் கைதட்ட முடியும். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஆழ்ந்த சிக்கல்கள் காணப்படுகின்றன. தலைசிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர். வேறு எதுவும் இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் முதல் தர கட்டமைப்பு உள்ளது. எனினும், போட்டிகளின்போது நிலைத்தன்மை இல்லை. பொறுமையும் இல்லை.
அது ரசிகர்களிடம் இருந்தும் வெளிவரும். ஒவ்வொரு முறையும் அணி தோல்வியடையும்போது, அதனை பார்த்து விரக்தி நிலைக்கு தள்ளப்படும் அவர்கள், வீரர்கள் உள்பட அனைவரையும் கிழித்தெறிய விரும்புகிறார்கள். நிறைய முறை அதனை நாங்கள் செய்திருக்கிறோம். உண்மையில் தற்போது வேறு எதுவும் மிச்சம் இல்லை என்று கூறினார்.
இதன்படி, அணியில் சிறந்த வீரர்கள் இருந்தபோதும், பல முறை அணி தோல்வியை தழுவியது என்றும் அதனால் வெறுத்து போன ரசிகர்கள் ஒட்டுமொத்த அணியையும் கடுமையாக விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்றும் அக்ரம் கூறுகிறார்.
இங்கிலாந்தில் 1987 மற்றும் 1996 ஆண்டுகளில் நடந்த 3 டெஸ்ட் தொடர்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றபோது இருந்த அணியில் இடம் பெற்றவர் அக்ரம். அடுத்தடுத்த தொடர்களில் அந்த அணி வெற்றி பெற்றபோது, அதன் கேப்டனாகவும் இருந்தவர் ஆவார்.