தகவல் தொழில் நுட்பத்துறை மனிதன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனடியாக தொடர்பு கொண்டு பேசும் வசதியை பிரமித்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது என சொல்லும் அளவிற்கு தற்போதைய நவீன கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன. அதிலும் ஏஐ வளர்ச்சி கண்ட பிறகு, வரும் காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மிரள வைத்து வருகின்றன. குறிப்பாக எலான் மஸ்க் நிறுவனத்தின் நியூராலிங் தொழில்நுட்பம் மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
தற்போது நியூராலிங்கிற்கு போட்டியாக, மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் பிரைன்2குவார்ட்டி வி2 (Brain2Qwerty v2) என்ற புதிய ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அறுவை சிகிச்சை இல்லாமலேயே மூளையில் உருவாகும் சிந்தனை சிக்னல்களை எழுத்தாகவும், முழுமையான வாக்கியங்களாகவும் மாற்ற முடியும்.
பக்கவாதம், மூளைக்காயம் அல்லது நரம்பியல் பாதிப்பால் பேசும் திறனை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மூளைக்குள் கருவி பொருத்துவதற்குப் பதிலாக, தலையின் வெளிப்புறத்தில் இருந்து மூளையின் செயல்பாட்டைப் பதிவு செய்யும் மெக் (MEG) தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. எதிர் காலத்தில் இதன் துல்லியத்தை மேலும் மேம்படுத்தி, பேச முடியாதவர்களுக்கு புதிய நம்பிக்கையாக மாற்றுவதே மெட்டாவின் இலக்காகும். எலான் மஸ்க்கின் நியூராலிங் தொழில் நுட்பமும் இதை சாத்தியமாக்கினாலும், அதற்கான கருவியை தலையில் அறுவை சிகிச்சை செய்து பொருத்த வேண்டும். அனால், அறுவை சிகிச்சை செய்யாமலே வெளிப்புறத்தில் கருவியை பொருத்தி சிந்தனையை செயல்படுத்தும் வகையிலான கண்டுபிடிப்பை வெளியிட்டு மெட்டா வியக்க வைத்துள்ளது.