கும்கி யானை கலீம் 
சிறப்புக் கட்டுரைகள்

99 ஆபரேஷன்கள்... காட்டு யானைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கும்கி ‘கலீம்’

கடந்த 1972-ம் ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் 6 வயதாக இருந்தபோது கலீம் பிடிபட்டது.

தமிழக வனத்துறையின் கம்பீர அடையாளமாகவும், ஒட்டுமொத்த இந்தியாவின் மிகச்சிறந்த கும்கி யானையாகவும் திகழ்ந்த 'கலீம்' தனது 60-வது வயதில் அதிகாரப்பூர்வமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றது.

காட்டு யானைகளுக்கு சிம்ம சொப்பனம்

கடந்த 1972-ம் ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் 6 வயதாக இருந்தபோது கலீம் பிடிபட்டது. அதன் அசாத்திய உடல் பலம் மற்றும் கட்டளைகளை உடனுக்குடன் புரிந்து கொள்ளும் புத்திசாலித்தனத்தால், மிக குறுகிய காலத்திலேயே இந்தியாவின் தலைசிறந்த கும்கி யானையாக உருவெடுத்தது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் எனப் பல்வேறு மாநில வனத்துறையினருக்கும் ஆபத்து காலங்களில் கலீமே ஆபத்பாந்தவனாக விளங்கியது.

சதமடிக்காத சாதனை பயணம்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 'அரிசி ராஜா', 'சின்னத்தம்பி' உள்ளிட்ட பல கொம்பன்களை அடக்கி, வனப்பகுதிக்குள் விரட்டுவதில் கலீமின் பங்கு அளப்பரியது. தன் வாழ்நாளில் 99 வெற்றிகரமான ஆபரேஷன்களை முடித்து சாதனை படைத்துள்ளது. தனது 100-வது ஆபரேஷனாக ஈரோடு தாளவாடி பகுதியில் 'கறுப்பன்' என்ற யானையை பிடிக்கக் களம் இறங்கியது. ஆனால், அந்த யானை அடர்ந்த காட்டிற்குள் ஓடிவிட்டதால், கலீமின் 100-வது ஆபரேஷன் கனவு நூலிழையில் கைநழுவியது என அதன் பாகன் மணி உருக்கமாக தெரிவித்தார்.

ராணுவ மரியாதை

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், இந்த வீரமிக்க யானைக்கு வனத்துறை சார்பில் ராணுவ மரியாதையுடன் கூடிய 'கார்டு ஆப் ஹானர்' கௌரவம் அளிக்கப்பட்டு, நெகிழ்ச்சியான பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

கண்ணீருடன் அதிகாரிகள்

ஓய்வு பெறும் விழாவின் போது, வனத்துறை அதிகாரிகள் மற்றும் சீருடை பணியாளர்கள் அனைவரும் அணிவகுத்து நின்று கலீமிற்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். " கண்கள் கலங்கின, நெஞ்சம் நன்றியால் நிறைந்தது" என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 5 டன் எடையும், 8 அடி உயரமும் கொண்ட இந்த ஜாம்பவான் ஓய்வு பெற்றாலும், முகாமில் உள்ள இளம் யானைகளுக்கு பயிற்சி அளிக்கும் வழிகாட்டியாக தொடர்ந்து டாப்ஸ்லிப்பிலேயே தங்கியிருக்கும் என வனத்துறை அறிவித்துள்ளது.