சிறப்புக் கட்டுரைகள்

பகலில் கல்லூரி பேராசிரியர்..மாலையில் வாடகை கார் டிரைவர் வேறு எங்கும் இல்லை..சென்னையில் தாங்க..!

நாட்டில் கல்வித்துறை வேலைவாய்ப்பின் நிலை குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

சென்னை,

முனைவர் பட்டம் பெற்று, ஒப்பந்த அடிப்படையில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றும் நபர் ஒருவர், போதிய வருமானம் இல்லாததால் குடும்ப செலவுகளுக்காகப் பகுதி நேரமாக வாடகை கார் டிரைவராக பணிபுரியும் தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

வேலைவாய்ப்பு, ஊதியம்

இந்தியாவில் உயர்கல்வி முடித்தவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த கவலையை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் சமீபத்தில் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பலர் ராஜாவின் விடாமுயற்சியைப் பாராட்டிய அதே வேளையில், நாட்டில் கல்வித்துறை வேலைவாய்ப்பின் நிலை குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

முனைவர் பட்டம்

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமலை ராஜன் என்பவர் பல ஆண்டுகள் படித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது அவர் சென்னை, மாநிலக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையிலான கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வருகிறார். பி.எட்., எம்.பில், பி.எச்டி. ஆகிய உயர்ந்த கல்வித்தகுதி இருந்தபோதிலும், அவருக்கு மாத ஊதியமாக வெறும் 30,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

தற்போதைய பொருளாதார சூழலில், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், இந்த 30,000 ரூபாய் ஊதியத்தை மட்டுமே நம்பி தனது குடும்பத்தை நடத்த முடியாத நிலை திருமலை ராஜனுக்கு ஏற்பட்டுள்ளது.

நிதி தேவை

திருமணமாகி மனைவி, இரு குழந்தைகளுடன் உள்ள குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களைக் காப்பாற்றவும் மாற்று வழி தேடிய அவர், தனது பணி நேரம் போக மீதமுள்ள நேரங்களில், சென்னையில் வாடகை கார் ஓட்டும் தொழிலைச் செய்து வருகிறார். அவரது மனைவியும் பள்ளி செல்லும் அவர்களது இரண்டு குழந்தைகளும் நாமக்கலிலேயே தொடர்ந்து வசித்து வருகின்றனர்.

சமீபத்தில் இவரது காரில் பயணம் செய்த பயணி ஒருவர், ஓட்டுநரிடம் இயல்பாக உரையாடியுள்ளார். அப்போது திருமலை ராஜன், தான் ஒரு பி.எச்.டி பட்டதாரி என்பதையும், கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வரும் தனக்குக் கிடைக்கும் குறைந்த சம்பளத்தின் காரணமாகவே வாடகை கார் ஓட்டுகிறேன் என்ற வேதனையான உண்மையையும் பகிர்ந்துள்ளார்.

ராஜாவின் சுயவிவரம்

முன்னதாக நாமக்கல்லில் தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகவும் திருமலை ராஜன் பணியாற்றி உள்ளார். இந்திய ரெயில்வே அதிகாரியான அனந்த் ரூபனகுடி, ராஜாவின் சுயவிவரம் குறித்துப் பேசியுள்ளார்.

தயவுசெய்து அவரது கல்வித் தகுதிகளையும் சில சாதனைகளையும் கூர்ந்து கவனியுங்கள். அவை எந்த வகையிலும் சிறியவை அல்ல. அவருக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை. அவரது சுயவிவரத்திற்குப் பொருத்தமான வாய்ப்பு யாரிடமாவது இருந்தால், தயவுசெய்து அவரைத் தொடர்பு கொள்ளுங்கள். யாருக்காவது அவரது சுயவிவரக் குறிப்பின் PDF கோப்பு வேண்டுமென்றால், உங்கள் மின்னஞ்சல் முகவரியை DM செய்யவும், நான் அதை அனுப்பி வைக்கிறேன்,” என்று ரூபனகுடி கூறி உள்ளார்.

பன்முகம் திறன்கொண்ட பேராசிரியர் ராஜா

அந்தப் பதிவின்படி, அவர் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் (PhD), MPhil, MA, உளவியல் துறையில் MSc, BEd, மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயம் (DTEd) உள்ளிட்ட பல கல்வித் தகுதிகளைப் பெற்றுள்ளார்.

அவர் தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார், முதன்மை மற்றும் சிறப்பு விரிவுரைகளை ஆற்றியுள்ளார், பல்கலைக்கழக வினாத்தாள் அமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார், மேலும் UGC-ஆல் பட்டியலிடப்பட்ட ஆய்விதழ்களில் ஆய்வுகளை வெளியிட்டுள்ளார்.

ராஜா, IQAC ஒருங்கிணைப்பாளர், தேர்வுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர், பதிப்பாசிரியர், ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் தகவல் தொடர்புத் திறன் பயிற்சியாளர் போன்ற பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். கல்வித்துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் குறைவான ஊதிய முறை குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.