சிறப்புக் கட்டுரைகள்

பாசப் போராட்டம்! தன் கால்களால் 60 நாட்கள் முட்டையை சுமக்கும் அதிசய பறவை 'பென்குயின்'

ஆண் பென்குயின் தன் கால்களின் மேலே வைத்து 60 நாட்களுக்கு மேல் அடைகாக்கும் அதிசய பிறவிகள் ஆகும்.

பென்குயின்

அண்டார்டிகா என்னும் உறைபனி பிரதேசத்தில் வாழும் எம்பிரர் பென்குயின் பறவைகளே தன் முட்டையை தரையில் வைக்காமல், கால்களின் மேல் வைத்து 60 நாட்களுக்கு மேல் அடைகாக்கும் அதிசய பிறவிகள் ஆகும். உறையும் பனிக்காற்றிலும் தன் வாரிசை உருவாக்க தந்தை பென்குயின்கள் நடத்தும் இந்த பாச போராட்டம் உலகையே வியக்க வைக்கிறது என்றால் மிகையல்ல.

உறைபனியில் ஒரு பாசக்கூத்து

அண்டார்டிகாவின் மைனஸ் 40 டிகிரி பனியில் முட்டை தரையை தொட்டால் அடுத்த 60 வினாடிகளில் அது உறைந்து இறந்துவிடும். தாய் பென்குயின் முட்டையிட்டவுடன், உடலின் சத்துக்கள் தீர்ந்துபோவதால் உணவை தேடி உடனே கடல் நோக்கி புறப்பட்டுவிடும்.

அப்பாவின் அரவணைப்பு

முட்டையை தன் கால்களின் மேல் ஏற்றி, தன் வயிற்று பகுதியில் உள்ள சூடான தோல் மடிப்பால் தந்தை பென்குயின் மூடிக்கொள்கிறது. முட்டையை கால்களில் சுமந்தபடி தந்தை பென்குயினால் எங்கும் நகர்ந்து சென்று வேட்டையாட முடியாது. பனிப்புயலை எதிர்கொண்டு, சுமார் 60 முதல் 75 நாட்கள் வரை ஒரு சொட்டு உமிழ்நீர் கூட அருந்தாமல் தந்தை பென்குயின் பட்டினியாக காத்துக் கிடக்கும்.

கூட்டமாக அரண்

கடுமையான குளிரில் இருந்து முட்டையை காப்பாற்ற, ஆயிரக்கணக்கான தந்தை பென்குயின்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக அரண் போல நின்று வெப்பத்தை உருவாக்கி கொள்ளும். சரியாக 60 நாட்களுக்கு பிறகு முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும் நேரத்தில், கடல் சென்ற தாய் பென்குயின் தன் வயிற்றில் மீன்களுடன் திரும்பி வரும்.

பாசப்பரிமாற்றம்

தாயின் குரலை கண்டுபிடித்து, மிக கவனமாக முட்டையையோ அல்லது குஞ்சையோ தந்தையிடமிருந்து தாய் தன் கால்களுக்கு மாற்றி கொள்ளும். வாரிசு பத்திரமாக தாயிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகே, எலும்பும் தோலுமாக மாறியிருக்கும் தந்தை பென்குயின் தனது பசியை போக்க முதன்முறையாக கடல் நோக்கி ஓடும். இயற்கையின் ஆகச்சிறந்த தந்தை என்ற பெருமைக்குரிய இந்த எம்பிரர் பென்குயின்களின் தியாகம், மனிதர்களுக்கே பாசப் பாடம் புகட்டும் அளவுக்கு உன்னதமானது.

பென்குயின்களின் தியாகம்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின அன்பின் முன்னே என்ற பாடல் வரிதான் நியாகத்திற்கு வருகிறது. அதுபோல எம்பிரர் பென்குயின்களின் தியாகம் அளப்பரியது என்றே சொல்லலாம்.