சென்னை,
நாட்டில் 1872-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. என்றாலும், 1901-ம் ஆண்டு முதல் தரவுகள் உள்ளது. அந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 16 கேள்விகள் கேட்கப்பட்டன. மார்ச் 1-ந் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்தியா முழுவதும் மக்கள்தொகை எண்ணிக்கை 23 கோடியே 83 லட்சத்து 96 ஆயிரத்து 327 ஆக இருந்தது. 1911-ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி, மக்கள்தொகை எண்ணிக்கை 25 கோடியே 20 லட்சத்து 93 ஆயிரத்து 390 ஆக இருந்தது. இது முந்தைய கணக்கெடுப்பைவிட 5.7 சதவீதம் அதிகம் ஆகும்.
அடுத்து, 1921-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 25 கோடியே 13 லட்சத்து 21 ஆயிரத்து 213 ஆக இருந்தது. இது முந்தைய கணக்கெடுப்பைவிட 0.3 சதவீதம் குறைவு ஆகும்.
அதன்பின்னர், 1931-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்புபடி, மக்கள்தொகையின் எண்ணிக்கை 27 கோடியே 89 லட்சத்து 77 ஆயிரத்து 238 ஆக இருந்தது. இது முந்தைய கணக்கெடுப்பைவிட 11 சதவீதம் அதிகம் ஆகும்.
தொடர்ந்து, 1941-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 31 கோடியே 86 லட்சத்து 60 ஆயிரத்து 580 ஆக மக்கள்தொகை உயர்ந்தது. இது முந்தைய கணக்கெடுப்பைவிட 14.2 சதவீதம் அதிகம் ஆகும்.
1951-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்புபடி, மக்கள்தொகையின் எண்ணிக்கை 36 கோடியே 10 லட்சத்து 88 ஆயிரத்து 90 ஆக இருந்தது. இது முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 13.3 சதவீதம் அதிகம் ஆகும்.
அடுத்து 1961-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 43 கோடியே 92 லட்சத்து 34 ஆயிரத்து 771 பேர் இருந்தனர். இது முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 21.6 சதவீதம் உயர்வு ஆகும்.
அதன்பின்னர், 1971-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 54 கோடியே 81 லட்சத்து 59 ஆயிரத்து 652 ஆக மக்கள்தொகை உயர்ந்தது. இது முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது, 24.8 சதவீதம் அதிகம் ஆகும்.
1981-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 68 கோடியே 33 லட்சத்து 29 ஆயிரத்து 97 ஆக மக்கள்தொகை உயர்ந்தது. இது முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 24.7 சதவீதம் அதிகம் ஆகும்.
அடுத்து 1991-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், 84 கோடியே 64 லட்சத்து 21 ஆயிரத்து 39 ஆக உயர்ந்தது. இது முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 23.9 சதவீதம் அதிகம் ஆகும்.
தொடர்ந்து, 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது நாட்டின் மக்கள்தொகை 100 கோடியே கடந்தது. அதாவது, 102 கோடியே 87 லட்சத்து 37 ஆயிரத்து 436 பேர் இருந்தனர். இது முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 21.5 சதவீதம் அதிகம் ஆகும்.
கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நாட்டின் மக்கள்தொகை 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 ஆக உயர்ந்தது. இது முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 17.7 சதவீதம் அதிகம் ஆகும்.
தற்போதைய நிலையில், நாட்டின் மக்கள்தொகை 147 கோடியே கடந்து சீனாவை பின்னுக்கு தள்ளி உலகில் முதலிடம் பிடித்தாலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படும் போதே உறுதியான தகவல்கள் வெளியாகும்.