பாரத ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு, ஜனவரி 24-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 453 கோடி டாலர் உயர்ந்து 46,669 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது. ஜனவரி 17-ந் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 94 கோடி டாலர் உயர்ந்து 46,216 கோடி டாலராக இருந்தது.
ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பில் பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர். மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அன்னிய செலாவணி கையிருப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
கணக்கீட்டுக் காலத்தில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள இதர செலாவணிகளின் மதிப்பு 447 கோடி டாலர் அதிகரித்து 43,292 கோடி டாலராக இருக்கிறது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 15 கோடி டாலர் உயர்ந்து 2,871 கோடி டாலராக உள்ளது. எஸ்.டீ.ஆர். மதிப்பு 30 லட்சம் டாலர் அதிகரித்து 145 கோடி டாலராக இருக்கிறது. அதே சமயம் பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 8.50 கோடி டாலர் குறைந்து 361 கோடி டாலராக உள்ளது.
நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் 3 வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 3,880 கோடி டாலர் உயர்ந்தது. இதனையடுத்து முதல் முறையாக இவ்வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 45,000 கோடி டாலரை தாண்டியது. தற்போது 47,000 கோடி டாலரை நெருங்கி இருக்கிறது.