ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பெருமளவில் கவனம் பெற்று வரும் ‘சட்லஜ்’ திரைப்படத்தை பஞ்சாப், தில்லி, ஹரியாணா, ஜம்மு மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள ஏராளமான சீக்கிய மத வழிபாட்டுத் தலங்களில் இப்படம் திரையிட்டுள்ளது.
தில்ஜித் தோசன்ஜ் நடிப்பில், ஹனி ட்ரீஹான் இயக்கத்தில் உருவான ‘சட்லஜ்’ திரைப்படம் கடந்த ஜூலை 3-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. ஜூலை 5-ம் தேதி அந்தப் படம் அதிரடியாக நீக்கப்பட்டது.
இந்நிலையில், பல ஆண்டுகளாக தணிக்கை வாரியத்துடனான வெளியீட்டுச் சிக்கலில் சிக்கித் தவித்து, பின்னர் ஓடிடியில் வெளியான திரைப்படம், 48 மணி நேரத்துக்குள் நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தப் பின்னணியில், அவசர அவசரமாக அந்தப் படம் நீக்கப்பட காரணம் என்ன? அப்படியென்ன ‘பேசக் கூடாத!’ அரசியலை அப்படம் பேசியது? அதன் பின்புலம் என்ன? - இவை பற்றி சற்று சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
பஞ்சாபில், கடந்த 1985-1995 வரை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்டு 25 ஆயிரத்துக்கும் அதிகமான சீக்கியர்களை இந்திய படைகள் படுகொலை செய்ததாக, ‘சட்லஜ்’ திரைப்படத்தில் கூறப்பட்டுள்ளது.
1980, 90-களில் காலிஸ்தான் பிரிவினைவாத போராட்டங்கள் பஞ்சாப்பில் தலைதூக்கி இருந்தன. அப்போது, கைதான சீக்கியர்கள் பலர் மர்மமான முறையில் மாயமானதாகத் தெரிகிறது. அவ்வாறு மாயமான சுமார் 25 ஆயிரம் பேர் காவல் துறையினரால் சட்டத்திற்குப் புறம்பாகக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக சொன்னவர்தான் சமூக செயற்பாட்டாளராகவும், மனித உரிமைகள் போராளியாகவும் அறியப்படும் ஜஸ்வந்த் சிங் கல்ரா. அதற்கான ஆதாரங்களையும் அவர் ஆவணப்படுத்தி இருந்தார். அவருடைய புலன் விசாரணை ஆதாரங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. பஞ்சாப்பில் மனித உரிமைகள் மீறல் என்று பேசவைத்தன.
கல்ரா கடந்த 1995-ம் ஆண்டு மாயமானார். ஓராண்டுக்குப் பின்னர் அவர் மர்ம மரணம் தொடர்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையில் கடைசியாக கல்ரா கைது செய்யப்பட்டு டார்ன் டரன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை கண்டுபிடித்ததோடு. அந்தக் காவல் நிலையத்தின் 9 காவலர்கள் மீது கடத்தல், கொலை குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பரிந்துரைத்தது. 2007 அக்டோபரில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், குற்றவாளிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது.
இந்த நிகழ்வுகள்தான் ‘சட்லஜ்’ திரைப்படத்தின் கதைக்களம். இதனால் இப்படம் தணிக்கையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், இப்படத்துக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த ‘பஞ்சாப் 95’ பெயரை மாற்றும்படி முதலில் கூறியது. அந்தப் பெயர் மாற்றப்பட்டு ‘சட்லஜ்’ என்று தலைப்பிடப்பட்டது. அது படத்தில் 127 திருத்தங்கள், 21 நீக்கங்களுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரைத்தது.
இயக்குநர் ஹனி ட்ரெஹான் இயக்கத்தில் நடிகர்கள் தில்ஜித் தோசாஞ்ச், அர்ஜுன் ராம்பால், கன்வாலிஜித் சிங், சுவிந்தர் விக்கி, கீத்திக்கா வித்யா ஒஹ்லியான் உள்ளிட்டோர் ‘சட்லஜ்’ படத்தில் நடித்துள்ளனர். தணிக்கை வாரியத்தின் பரிந்துரைகளை படக்குழு ஏற்காததால், படம் வெளியாகமலேயே இருந்தது.
‘சட்லஜ்’ படம் ஜூலை 3ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் ஆனது. ஆனால் ஜூலை 5-ம் தேதி மாலையே படம் நீக்கப்பட்டது. படம் நீக்கப்பட்டது குறித்து ஜீ 5 விளக்க அறிக்கையையும் வெளியிட்டது.
இது குறித்து ஜீ 5 தளம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “‘சட்லஜ்’ படத்திற்கும் அதன் படைப்பு சுதந்திரத்திற்கும் நாங்கள் எப்போதும் துணை நிற்போம். தற்போதைய சில சூழ்நிலைகளால் இந்தியாவில் தற்காலிகமாக இப்படம் நீக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான வழிகளை ஆராய்ந்து, மிக விரைவில் இப்படத்தை மீண்டும் இந்திய ரசிகர்களுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளது.
பொதுவாக ஓடிடியில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் தேவையில்லை. அதைப் பயன்படுத்தியே படக்குழு ஜீ5 ஓடிடி தளத்தில் படத்தினை வெளியிட்டது. இருப்பினும் மத்திய அரசு 2021 தகவல் தொழில்நுட்ப சட்டத்தை சுட்டிக்காட்டி படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்கச் செய்துள்ளது. ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்கள் மத்திய அரசின் 2021 ஐ.டி சட்டங்களைப் பின்பற்றுவது கட்டாயம் என்று கூறி அதன் அடிப்படையில் ‘சட்லஜ்’ திரைப்படத்தை நீக்கச் செய்துள்ளது.
இதனிடையே, படத்துக்கு ஆதரவாக விமர்சனங்கள் பெருகிவருகின்றன. ‘சட்லஜ்’ திரைப்படத்தை வெளியாகி 48 மணி நேரத்திலேயே மத்திய அரசு நீக்கியிருந்தாலும் கூட, பல்வேறு முன்னணி ஊடகங்களும் அப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை வெளியிட்டுள்ளன. ‘சட்லஜ்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், அதைப் பற்றிய பேச்சுகளும், விவாதங்களும் இணைய வெளியில் மிகுந்து வருகிறது.
இந்த நிலையில், ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பெருமளவில் கவனம் பெற்று வரும் ‘சட்லஜ்’ திரைப்படத்தை பஞ்சாப், தில்லி, ஹரியாணா, ஜம்மு மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள ஏராளமான சீக்கிய மத வழிபாட்டுத் தலங்களில் இப்படம் திரையிட்டுள்ளது.