சிறப்புக் கட்டுரைகள்

பூமி காப்போம்; உயிரினங்களை வாழ்விப்போம்...!

இன்று(ஏப்ரல் 22-ந் தேதி) உலக பூமி தினம்.

புவி பாதுகாப்பையும், அதன் வளங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் கேலார்ட் நெல்சன் என்பவரின் முயற்சியால் 1970-ம் ஆண்டு இந்த தினமானது எர்த் டே நெட்வொர்க் என்னும் அமைப்பால் தொடங்கப்பட்டது. மொத்தம் 193 நாடுகளை இதுவரை தன்னுடன் இணைத்துள்ள இந்த அமைப்பானது, உலகம் முழுக்க உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒன்றுதிரட்டி பூமியின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களையும், அது சார்ந்த கருத்து பரிமாற்றங்களையும் இத்தினத்தில் மேற்கொள்ளும். அவ்வகையில் இன்று 49-வது சர்வதேச பூமி தினமாகும்.

ஒவ்வொரு வருடமும் ஒரு கருத்துருவில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் இந்த அமைப்பானது இந்த வருடம் பூமியின் உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்போம் என்ற கருத்துருவில் இன்று உலக பூமி தினத்தை கொண்டாடுகிறது. சுமார் நாலரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பூமி பிறந்ததாக அறியப்படுகிறது. பூமி தவிர வேறேன்ன கிரகங்களில் உயிரினங்கள் வாழ முடியும் என்று எத்தனையோ ஆராய்ச்சிகளை தொடர்ந்து மனிதன் மேற்கொண்டாலும், அனைத்து உயிர்களும் தடையின்றி வாழ உகந்த ஒரே கிரகம் பூமி மட்டுமே என்ற விடையே மீண்டும் மீண்டும் கிடைக்கிறது.

பூமியின் கட்டமைப்பு என்பது மனிதன் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் வாழக்கூடிய வகையில் மிக சிரத்தையுடன் இயற்கை வரமாய் உருவானதாகும். எந்தெந்த உயிரினம் எங்கெங்கே வாழுதல் நலம் என்று தானாகவே பூமி ஏற்படுத்திய வரைமுறைதான் மனிதன் நாட்டிலும், விலங்குகள் காட்டிலும் வாழும்படியாக காலப்போக்கில் மாறியது. ஆனால் மனிதனின் பேராசையோ, போதும் என்ற மனமின்றி இயற்கையை அழித்து செயற்கை பொருட்களை உருவாக்கத் தொடங்கியது. அதன் ஒரு தொடக்கமாகத்தான் காடுகள் அழிக்கப்பட்டு விலங்குகளின் உறைவிடங்கள் அபகரிக்கப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் நிற்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இருநூறு முதல் இரண்டாயிரம் உயிரினங்கள் அழிந்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் இதுவே பத்தாயிரம் வரைகூட உயரக்கூடுமாம். சென்ற நூற்றாண்டில் சர்வ சாதாரணமாக உயிர் வாழ்ந்த புலி இனங்கள் கூட இன்று வேகமாக அழிந்து வரும் உயிரினங்களில் சேர்ந்துகொண்டது நம் கண் முன்னே நடந்த துயரமாகும். 2050-க்குள் முப்பதிலிருந்து ஐம்பது சதவீதம் உயிரினங்கள் பூமியிலிருந்து நிரந்தரமாக விடைபெற்று கொள்ளுமாம். சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அன்றாடம் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவி இனங்கள் இன்று முற்றிலும் காணாமல் போனது இதற்கு பெரும் உதாரணமாகும்.

வேகமாக அழிந்து வரும் விலங்குகளில் சில அரிய வகை கொரில்லாக்கள், கடல் ஆமைகள், ஒரங்குட்டான்கள், காட்டு யானைகள், காண்டாமிருகங்களும் அடக்கம். இவ்வகை உயிரினங்களின் மரபணுக்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் பூமியில் நிலைப்பெற்று வாழ்ந்தவையாகும். அவை அழிந்தால் அழிந்ததுதான். மீண்டும் ஒரு புலியையோ, யானையையோ நம் அடுத்த தலைமுறை அறியாது. ஒரு இனமே இவ்வாறு சுவடின்றி அழிந்து போவது பூமிக்கு ஏற்பட்ட பெரும் சாபக்கேடாகும்.

உயிரினங்கள் அழிவின் விளிம்பில் நிற்க பூமி வெப்பமயமாகுவதும் ஓர் முக்கிய காரணமாகும். வேகமாக உருகி வரும் பனி பாறைகள் பல்வேறு பனிக்கரடிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது. மேலும் அதிக வெப்பமானது கடல் வாழ் உயிரினங்களை இன பெருக்கத்திலிருந்தும் தடுக்கிறது.

தேனீக்கள் என்று அழிகிறதோ அன்று உலகமும் அழிந்துபோகும் என்று புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஒரு ஆராய்ச்சியின்போது மேற்கோள்காட்டி கூறியுள்ளாராம். அதிகமான பூச்சி கொல்லி உபயோகம் மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீ உள்ளிட்ட பல்வேறு பூச்சி இனங்களை கொல்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சராசரியாக நூற்றில் எழுபது சதவீத பயிர்களின் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்களே காரணம். அவைகள் அழிந்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். 2015-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஓர் கணக்கெடுப்பில் தேனீக்களின் எண்ணிக்கை 44 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்தது. இது இயற்கை மனிதனுக்கு அளித்துள்ள எச்சரிக்கை குரலாகவே அறியப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் மனிதனும் அழியும் மிருகங்கள் பட்டியலில் நிச்சயம் சேர்ந்துவிடுவான்.

உலகம் வெப்பமயமாகுதல், காற்று மாசு, காடழிப்பு, பசுமைக் குடில் விளைவுகள், தண்ணீர் பஞ்சம் என்று பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் இந்நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது. முடிந்தவரை காற்று மாசை தடுத்து, அதிக அளவில் மரங்கள் நட்டு, தண்ணீர் சேமிப்பு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்தி, இயற்கையை அதன் வழியிலேயே பாதுகாத்தால் மட்டுமே மனிதனால் தன் அடுத்த தலைமுறைக்கு தன் முன்னோரும் தானும் அனுபவித்த இயற்கை வளங்களை பரிசாய் தரமுடியும். இல்லையேல் இனிவரும் தலைமுறைகள் புலியையும், யானையையும், ஏன் மழையை கூட புகைப்படத்தில்தான் காண இயலும். எந்த மனிதனும் திட்டம் போட்டு பூமியை உருவாக்கவில்லை. மனித குலம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை தன் மடியில் தாங்கிக்கொள்ள எழில் நிறைந்து பிறந்ததுதான் இந்த பூமி. நம்மைக் காக்கும் இந்த இயற்கை அன்னையை கண்ணும் கருத்துமாய் காக்க இந்நாளில் நாம் அனைவரும் உறுதிகொள்வோம்.

- முனைவர் தி.ஞா.நித்யா, இணைப் பேராசிரியர், தனியார் கல்வி நிறுவனம், சென்னை.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்