சிறப்புக் கட்டுரைகள்

ஈரானுக்கு பயந்து லாரியில் பதுங்கி ராணுவ விமானத்தில் சென்றாரா டிரம்ப்... உண்மை என்ன? கசிந்த ரகசிய தகவல்

விமான நிலையத்தின் உணவு கொண்டு செல்லும் லாரியில் ஏறி ரகசிய பயணம் செய்து, பின்னர் ஏர் போர்ஸ் சி-32ஏ என்ற சிறிய ரக விமானத்தில் ஏறியுள்ளார்.

வாஷிங்டன்

ஈரானுக்கு பயந்து டிரம்ப், உணவு லாரியில் பதுங்கி ராணுவ விமானத்தில் ஏறி சென்ற தகவல் தெரிய வந்துள்ளது.

துருக்கியில் நேட்டோ உச்சி மாநாடு கடந்த மாதம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சென்றார். அப்போது அவர், கத்தார் நாடு பரிசாக வழங்கிய, அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட, புதிதாக புதுப்பிக்கப்பட்ட ஜெட் விமானத்தில் சென்றார்.

புதிய விமானம்

டிரம்ப் முதன்முறையாக புதிய விமானத்தில் சர்வதேச பயணம் மேற்கொண்டது பரபரப்பாக பார்க்கப்பட்டது. இதன்பின் தலைநகர் அங்காராவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும்போது, அதில் பயணிக்காமல், பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பினார். இது புதிய விமானத்தின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பியது.

ஏனெனில், ஈரானின் எல்லையையொட்டி துருக்கி அமைந்துள்ளது. ஈரானுடன் மோதல் அதிகரித்து உள்ள சூழலில் இந்த பயணம் அமைந்திருந்தது.

திருப்பம்

ஆனால், அதிலும் மற்றொரு திருப்பம் ஏற்பட்டு உள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறும்போது, ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் செல்கிறார் என தெரிவித்தனர். இதனால், பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்கள், டிரம்ப் தங்களுடன் விமானத்தில் பயணிக்கிறார் என நம்பினர். ஆனால், அதில் உண்மையில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

நிருபர்கள் முன், அவர் பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவது போன்று காட்டி கொண்டாலும், பின்னர் அவர், யாருக்கும் தெரியாமல், விமான நிலையத்தின் உணவு கொண்டு செல்லும் லாரியில் ஏறி ரகசிய பயணம் செய்து, பின்னர் ஏர் போர்ஸ் சி-32ஏ என்ற சிறிய ரக விமானத்தில் ஏறியுள்ளார். இதனால், அவர் 3-வது விமானத்திலேயே உண்மையில் பயணித்து இருக்கிறார்.

வெள்ளை மாளிகை

அந்த விமானம் இங்கிலாந்துக்கு இரவு 10.20 மணியளவில் சென்று சேர்ந்தது. இதன்பின்பு சில நிமிடங்கள் கழித்து, அந்த பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானமும், ஊடகத்தினரும் சென்று சேர்ந்தனர் என அதுதொடர்பான தகவல் தெரிவிக்கின்றது.

இதுபற்றி அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவ் செங்கிடம் கேட்டபோது, ஜனாதிபதி சமீபத்தில் கூறியது போன்று, அமெரிக்காவுக்கு பல எதிரிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் டிரம்ப்பை கவனித்து கொண்டு இருக்கின்றனர். அந்த அச்சுறுத்தல்களை தவிர்க்க எல்லா விசயங்களையும் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் என்றார். இதனால், ஈரானுக்கு பயந்து, டிரம்ப் 3 விமானங்களில் மாறி மாறி சென்றது தெரிய வந்துள்ளது.