மின்சார தேவைக்கும் மின் உற்பத்திக்குமான இடைவெளிதான் மின் தடைக்கு காரணம். பறந்து விரிந்த நமது தேசத்தில் ஒரு பகுதியில் மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாவதும், கடைக்கோடியில் உள்ள தென் பகுதியில் மின் தட்டுப்பாடு நிலவுவதும் காலம் காலமாக நிலவி வரும் பிரச்சினை. இந்தியாவில் மின் வினியோகத்தை நிர்வாக வசதிக்காக 5 மண்டல கிரிட்கள் (தொகுப்புகள்) பிரிக்கப்பட்டன. 1990-களின் தொடக்கத்திலேயே இவற்றை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இதன் முக்கிய நோக்கமே மிகையாக மின்சாரம் உற்பத்தியாகும் பகுதிகளில் இருந்து தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு தேசிய கிரிட் (தேசிய மின்தொகுப்பு) மூலம் கொண்டு செல்வதுதான். இதன்படி 2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய நாளாக அமைந்தது. ஆம் அன்றுதான் நாட்டில் எப்பகுதியிலும் மின் தடையே இல்லாத நிலை இருந்தது. அன்றைய தினம் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட் ரூ.2.30 என்ற விலையில் இருந்தது. 2016-ம் ஆண்டில் மின்சாரம் மிகக் குறைந்த விலையில் விற்பனையானதும் அன்றைய தினத்தில்தான்.
மின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மின் பகிர்வில் சீரான நிலை ஆகியவற்றின் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் மின்சாரத்தின் விலை 25 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது 2014-ம் ஆண்டு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.21 என்ற விலையில் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இது ரூ.2.30 என்ற அளவுக்கு வந்துவிட்டது. தொடர்ந்து மின் பற்றாக்குறையைச் சந்தித்து வந்த தென் பகுதி இந்த ஒருங்கிணைப்பு மூலம் தட்டுப்பாடு இல்லாத நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக தென் பகுதியில் கிரிட் இணைப்பை வலுப்படுத்த இன்னும் சில பணிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இவை அனைத்தும் முழுமை
பெற்றால் வட மாநிலங்களின் மிகை மின்சாரம், தென் பகுதிக்கு மின் தட்டுப்பாடு சமயத்தில் எளிதாகக் கிடைக்கும். மேலும் நாடு முழுவதும் ஒரே அளவிலான விலையில் இது கிடைக்கும்.
ஏற்கனவே வட மாநிலங்களில் கிரிட் மூலம் பெரும்பகுதி இணைக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு மின் பகிர்வை ஒருங்கிணைக்க வேண்டும். இவை அனைத்தும் இணைக்கப்படும்போது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மிகை மின்சாரத்தை மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் தேசத்தின் எந்த மூலையிலும் மின் தட்டுப்பாடு எனும் பெரும் பிரச்சினையை எளிதாக தீர்க்க முடியும்.