சிறப்பு செய்திகள்

உண்ணாவிரதம் இருக்க போறீங்களா?: இதை கடைபிடியுங்கள்!

உண்ணாவிரதம் இருக்கும்போதோ, சாப்பாட்டை தவிர்க்கும்போதோ குறைந்த கலோரிகள் கொண்ட பழங்களை சாப்பிடலாம்.

வாரத்திலோ, மாதத்திலோ மூன்று வேளைகளில் ஒன்று அல்லது இரு வேளை சாப்பிடாமல் இருக்கும் வழக்கத்தை சிலர் கடைப்பிடிக்கிறார்கள். உடல் எடையை குறைப்பதற்காகவும், உடல் சார்ந்த உபாதைகளில் இருந்து விடுபடுவதற்காகவும் இந்த வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். மதம் சார்ந்தும் உண்ணாவிரதம் கடைப்பிடிக்கிறார்கள்.

உண்ணாவிரதத்தின்போது இடைப்பட்ட நேரத்திலோ, உண்ணாவிரத்தை முடித்த பிறகோ என்ன சாப்பிட வேண்டும் என்பதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. தாங்கள் விரும்பிதை சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிடுவது உண்ணாவிரத முயற்சிக்கு பலன் கிடைக்காது. உண்ணாவிரத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கம் பற்றி பார்ப்போம்.

* உடல் எடையை குறைக்கும் நோக்கில் சாப்பிடாமல் இருப்பவர்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவசியமானது. ஜீரோ கலோரி உணவு பொருளாக கருதப்படும் தண்ணீர் பருகுவது நல்லது. அது உடலை ஆற்றலுடன் செயல்பட வைக்கும். அதனால் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் பருகுவது நல்லது.

* உண்ணாவிரத்தின்போது ஜீரோ கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட முடியாதவர்கள் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடலாம். அவை கார்போஹைட்ரேட்டுகளின் அளவை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.

* கேரட், வெள்ளரி போன்றவை குறைந்த கலோரிகள் கொண்டவை. அவற்றில் நார்ச்சத்தும் அதிகமாக இருக்கும். ஆதலால் சாப்பாட்டை தவிர்ப்பவர்கள் கேரட் மற்றும் வெள்ளரியை சாப்பிடலாம். இவை சோர்வை போக்கி உடல் ஆற்றலை மேம்படுத்த உதவும்.

* உண்ணாவிரதம் இருக்கும்போதோ, சாப்பாட்டை தவிர்க்கும்போதோ குறைந்த கலோரிகள் கொண்ட பழங்களை சாப்பிடலாம். ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள், பெர்ரி வகை பழங்களை தேர்ந்தெடுக்கலாம். இவற்றில் நார்ச்சத்தும் மிகுந்திருக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கும்.

* உண்ணாவிரத நாட்களில் பால் மற்றும் பால் பொருட்கள் சாப்பிடுவதும் நல்லது. ஸ்ட்ராபெர்ரி, முலாம்பழம் மற்றும் வாழைப்பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் மில்க் ஷேக்குகள் நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

* ஆப்பிள், பேரிக்காய், திராட்சை போன்ற பழங்களை துண்டுகளாக நறுக்கி தயிருடன் கலந்து சாப்பிடலாம்.

* உலர் பழங்கள், தானியங்கள், பாதாம், அக்ரூட் போன்ற நட்ஸ் வகைகளை போன்றவற்றையும் உட்கொள்ளலாம். எனினும் பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* உண்ணாவிரதம் இருக்கும்போது சாப்பிடுவதற்கு ஏற்ற உணவுகளில் ஓட்ஸூக்கு முக்கிய இடமுண்டு. இதனை சாப்பிடுவதன் மூலம் உடலில் தேவையற்ற கலோரிகள் சேர்வதையும் தடுத்துவிடலாம். ஓட்ஸ் போன்ற குறைவான கலோரிகள் கொண்ட உணவுகள் செரிமானத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. உடல் நலத்தையும் மேம்படுத்தும்.

* நொறுக்குத்தீனி சாப்பிட ஆசைப்படுபவர்கள் மக்காச்சோளத்தை தேர்ந்தெடுக்கலாம். குறைந்த கலோரி கொண்ட இதில் நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. நார்ச்சத்தும் உள்ளடங்கி இருக்கிறது. ஆனால் எண்ணெய்யில் பொறித்த பாப்கார்னை சாப்பிடக்கூடாது. மக்காச்சோளத்தை வேகவைத்து சாப்பிடுவதுதான் நல்லது.

* உண்ணாவிரதம் இருக்கும் சமயத்தில் தேர்ந்தெடுக்கும் உணவுகள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிவையாக இருக்க வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு கலந்த உணவு பொருட்களை தவிர்த்துவிட வேண்டும்.