ஜப்பான்,
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 தொடரில் இருந்து நீரஜ் சோப்ரா விலகி இருக்கும் நிலையில், தற்போது அனைவரது பார்வையும் வைபவ் சூர்யவன்ஷி மீது குவிந்துள்ளது.
ஜப்பானில் வருகிற 19-ந்தேதி தொடங்க உள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது. கடந்த முறை வென்ற 106 பதக்கங்கள் என்ற சாதனையை முறியடித்து, இம்முறை 106-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்லும் இலக்குடன் இந்திய வீரர்-வீராங்கனைகள் களம் காண உள்ளனர்.
இம்முறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்-வீராங்கனைகள் 43 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் சார்பில் 503 வீரர்-வீராங்கனைகள் உள்பட மொத்தம் 768 பேர் கொண்ட குழு ஜப்பான் செல்கிறது. இதில் 269 ஆண் வீரர்களும், 234 பெண் வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய வீரர்-வீராங்கனைகள் 36 விளையாட்டுப் பிரிவுகளில் பதக்கங்களுக்காக போட்டியிட உள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் சர்பிங் (அலைச்சறுக்கு) பிரிவில் இந்தியா பங்கேற்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணிக்கு சில பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளன. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, கணுக்கால் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
முக்கிய பேட்ஸ்மேனான ஜெமிமா ரோட்ரிக்ஸ் காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவில்லை. மல்யுத்த வீரர்கள் முகுல் தஹியா, தீபன்ஷு மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீரர் கெளரவ் குமார் ஆகியோர் ஊக்கமருந்து விதிகளை மீறியதற்காகத் தடை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு அதிக பதக்கங்களைப் பெற்று தந்துள்ள தடகள பிரிவின் மீது இம்முறையும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளத்தில் இந்தியா 85 தங்கம் உள்பட 283 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை தாங்குகிறார். இந்த அணியில் இடம்பெற்றுள்ள 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது ரசிகர்களின் கவனம் குவிந்துள்ளது.
கபடியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்களது தங்கப் பதக்கங்களை தக்கவைத்து கொள்ளும் முனைப்புடன் களம் காண உள்ளன.
இந்திய அணி 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 70 பதக்கங்களையும், 2022-ம் ஆண்டு போட்டியில் 106 பதக்கங்களையும் வென்றது.
இந்த நிலையில், 106 பதக்கங்கள் என்ற சாதனையை முறியடித்து, இம்முறை புதிய வரலாறு படைக்கும் முனைப்புடன் இந்திய வீரர்-வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.