சிறப்பு செய்திகள்

பஸ் டிரைவரின் மகனாக இருந்து பான்-இந்தியா சூப்பர் ஸ்டாரான கதை... ‘ராக்கி பாய்’ யாஷ் பற்றிய சுவாரசிய தகவல்கள்

யாஷ், 2007-ம் ஆண்டு வெளியான ‘ஜம்பட ஹுடுகி’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

சென்னை,

பேருந்து ஓட்டுநரின் மகனாக இருந்து பான்-இந்தியா சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் யாஷை பற்றி தற்போது பார்ப்போம்.

யாஷ்

யாஷ் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அவர் நடித்த ‘கே.ஜி.எப்’ திரைப்படங்கள்தான். ‘கே.ஜி.எப் 1’ மற்றும் ‘கே.ஜி.எப் 2’ படங்களின் மூலம் பான்-இந்தியா அளவில் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார். குறிப்பாக, இப்படங்களில் அவர் நடித்த ‘ராக்கி பாய்’ கதாபாத்திரம் யாஷை இந்தியா முழுவதும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

இந்நிலையில், யாஷின் திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல சுவாரசியமான தகவல்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இயற்பெயர்

யாஷின் இயற்பெயர் நவீன் குமார் கவுடா. திரையுலகிற்கு வந்த பிறகே அவர் தனது பெயரை ‘யாஷ்’ என மாற்றிக்கொண்டார். அவரது தந்தை அருண் குமார் பெங்களூரில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர். தாய் புஷ்பா இல்லத்தரசி.

தேநீர் வழங்கிய யாஷ்

படிப்பில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாததால், பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய யாஷ், திரையுலகில் வாய்ப்பு தேட தொடங்கினார். முதலில் நாடக துறையில் தனது பயணத்தை தொடங்கிய அவர், நாடக கலைஞர்களுக்கு தேநீர் வழங்குவது உள்ளிட்ட பணிகளையும் செய்துள்ளார். இதற்காக ஒரு நாளைக்கு ரூ.50 ஊதியமாக பெற்றதாக கூறப்படுகிறது.

பின்னர் கன்னட இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய யாஷ், 2007-ம் ஆண்டு வெளியான ‘ஜம்பட ஹுடுகி’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

விருதும், அடுத்தடுத்த வெற்றிகளும்

‘மொக்கின மனசு’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதை யாஷ் வென்றார். தொடர்ந்து ‘கூக்ளி’, ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமச்சாரி’ உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.

அதன்பிறகு வெளியான ‘கே.ஜி.எப்’ திரைப்படங்கள் அவருக்கு இந்திய அளவில் மட்டுமின்றி உலகளாவிய புகழையும் பெற்றுத் தந்தன.

சீரியலில் தொடங்கிய காதல்

திரையுலகிற்கு வருவதற்கு முன்பே ‘உத்தராயணா’ மற்றும் ‘நந்த கோகுலா’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் யாஷ் நடித்துள்ளார். அப்போது நடிகை ராதிகா பண்டிட்டை சந்தித்தார். இருவருக்கும் இடையிலான நட்பு நாளடைவில் காதலாக மாறியது. சுமார் 5 ஆண்டுகள் காதலித்த பின்னர், இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். யாஷ் - ராதிகா பண்டிட் தம்பதிக்கு ஐரா மற்றும் யதர்வ் என இரு குழந்தைகள் உள்ளனர்.

பேருந்து ஓட்டுநரின் மகனாக வாழ்க்கையை தொடங்கி, நாடக மேடையில் சிறு பணிகளைச் செய்து, சீரியலில் நடித்து, பின்னர் கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோவாகவும், ‘கே.ஜி.எப்’ மூலம் பான்-இந்தியா சூப்பர் ஸ்டாராகவும் உயர்ந்த யாஷின் பயணம் ரசிகர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

‘டாக்சிக்’

யாஷ் தற்போது ‘டாக்சிக்’ திரைப்படம் மூலம் ரசிகர்களை சந்தித்துள்ளார். பீரியட் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.