கடலை பருப்பு - 1 கப்
சோம்பு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
தேங்காய் - ¼ கப்
தண்ணீர் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
முதலில் வடையை தயார் செய்ய வேண்டும். அதற்கு, கடலை பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுக்கவும். பின்னர், தண்ணீரை வடிகட்டி, கடலை பருப்பை மிக்சி ஜாரில் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் சோம்பு, காய்ந்த மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து நரநரவென அரைத்து எடுக்கவும். பின்னர், அதை சிறிய உருண்டைகளாக உருட்டி லேசாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். வடைபோல் பொன் நிறமாக பொரிய வேண்டிய அவசியம் இல்லை. லேசாக பொரிந்தாலே போதும். பின்னர், வடையை துண்டு துண்டாக உடைத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து, ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கடலை எண்ணெய்யை ஊற்றி, எண்ணெய் சூடாகியதும் வாசனைக்காக பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும். தொடர்ந்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, தேவையான அளவு உப்பை கலக்கவும். வெங்காயம் வதங்கி பொன் நிறமானதும் பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலா, மிளகாய் பொடி, சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
மசாலா கெட்டியாகாமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அடுத்து, நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். தேங்காயை மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து சேர்க்கவும். அடுத்து, துண்டு துண்டாக உடைத்து வைத்த வடை துண்டுகளை சேர்க்கவும். அடுத்து, நன்கு கலந்துவிட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, சிறிதளவு மல்லி இலையை தூவி இறக்கவும். சுவையான வடகறி குழம்பு ரெடி.