சிறப்பு செய்திகள்

சண்டே ஸ்பெஷல்: கல்யாண வீட்டு சுவையில் உருளைகிழங்கு பட்டாணி குருமா செய்வது எப்படி..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் கல்யாண வீட்டு சுவையில் உருளைகிழங்கு பட்டாணி குருமா செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்:-

தேங்காய் - அரை மூடி (பாதி)

கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்

ஏலக்காய் - 4

பட்டை - 2

கிராம்பு - 4

சோம்பு - 1 டீஸ்பூன்

கசகசா - ½ டீஸ்பூன்

முந்திரி பருப்பு - 7

பொட்டு கடலை - 1 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

உருளைகிழங்கு - 3 (மீடியம் சைஸ்)

பச்சை பட்டாணி - 2 கைப்பிடி அளவு

தக்காளி - 2 (மீடியம் சைஸ்)

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்

மல்லிப் பொடி - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:-

முதலில் தேங்காய் விழுதை தயார் செய்ய வேண்டும். அதற்கு, தேங்காயை மிக்சி ஜாரில் துண்டு துண்டாக வெட்டி போட்டு, அத்துடன் 2 ஏலக்காய், 1 பட்டை, 2 கிராம்பு, சோம்பு, கசகசா, முந்திரி பருப்பு, பொட்டு கடலை ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும்.

அடுத்து, குருமா தயார் செய்ய, ஒரு குக்கரில் கடலை எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் சூடாகியதும், அதில், ஒரு பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய் ஆகியவற்றை போடவும். சற்று கிளறிவிட்ட பிறகு, நீளமாக வெட்டிவைத்த பெரியவெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் நன்கு வதங்கி வரும்போது, இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து, வாசனை போகும் வரை வதக்கவும். அதன்பின்னர், சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்கவும். அடுத்து, உருளைக்கிழங்குகளை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி சேர்க்கவும். தொடர்ந்து, பச்சை பட்டாணியை சேர்க்கவும் (காய்ந்த பட்டாணி என்றால் முன்கூட்டியே ஊறவைத்து சேர்க்கவும்). நன்கு கிளறிவிட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

வெட்டி வைத்த தக்காளியையும் சேர்க்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு கிளறவும். தக்காளி லேசாக வதங்கினால் போதும். தொடர்ந்து, பச்சை மிளகாய் சேர்க்கவும். அத்துடன், மஞ்சள் பொடி, கரம் மசாலா, மிளகாய் பொடி, மல்லிப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். பச்சை வாசனை போகும் வரை 2 நிமிடம் வதக்கவும். அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பை சேர்த்துக்கொள்ளவும்.

அதன்பிறகு, நன்கு கொதிக்கவிடவும். உப்பு, காரத்தை சரிபார்த்துக்கொள்ளவும். தேவை என்றால், சேர்த்துக்கொள்ளவும். அதன்பின்னர், குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவிடவும். பிறகு, அடுப்பை 'ஆப்' செய்து விடவும். ஆவி வெளியேறியவுடன் குக்கர் மூடியை திறக்கவும். கொத்தமல்லி இலை சிறிதளவு தூவவும். கிரேவி பதத்தில் மணமணக்கும் கல்யாண வீட்டு சுவையில் உருளைகிழங்கு பட்டாணி குருமா ரெடி. சாப்பாடு, டிபன் இரண்டுக்கும் சிறந்த 'சைடிஸ்'.