ஆட்டுக்கால் - 2
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்- 5½ டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் (சோம்பு) - ½ டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
பட்டை -2
பெரிய வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் பொடி - 1½ டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
முதலில் ஆட்டுக்கால்களை தீயில் நன்கு சுடவேண்டும். கியாஸ் அடுப்பில் கூட சுடலாம். தீயில் ரோமங்கள் கருகிய பிறகு, அதை சுரண்டி நீக்க வேண்டும். கால் பாதத்தில் உள்ள முட்டியையும் தட்டி நீக்கிவிட வேண்டும். அடுத்து, ஆட்டுக்கால்களை நன்கு கழுவி, துண்டு துண்டாக வெட்டி குக்கரில் எடுத்துக்கொள்ளவும். கால்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி, ½ டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து மூடிவைத்து 10 விசில் வரும் வரை நன்கு வேகவிடவும்.
அடுத்து, ஒரு வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் ½ டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, மிளகு, பெருஞ்சீரகம் (சோம்பு) ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுக்கவும். அடுத்து, ஒரு மிக்சி ஜாரில் அரை மூடி அளவுக்கான துருவிய தேங்காயை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் வறுத்து வைத்த மிளகு, பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து, ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் 5 டீஸ்பூன் நல்லெண்ணெயை எடுத்துக்கொள்ளவும். அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை சேர்த்து, அவை பொறிந்ததும், வெட்டி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அடுத்து 1½ டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அடுத்து, வெட்டி வைத்த தக்காளி, சிறிதளவு கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கிரேவி பதத்திற்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும்.
அடுத்து, மிளகாய் பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வதக்கிய மசாலாவை குக்கரில் வேகவைத்து எடுத்த ஆட்டுக்காலுடன் சேர்க்கவும். ஆட்டுக்காலுடன் உள்ள தண்ணீரை அப்படியே பயன்படுத்தவும். அதில்தான் சத்து அதிகம் உள்ளது. தொடர்ந்து, அரைத்து வைத்த தேங்காயையும் சேர்க்கவும். காரம், உப்பு தேவை என்றால் கூடுதலாக சேர்த்துக்கொள்ளவும். அடுத்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேகவிடவும். அதன்பின்னர், மூடியை திறந்து கிளறிவிடவும். சிறிதளவு கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். சுவையான, சத்தான ஆட்டுக்கால் குழம்பு ரெடி.