பொன்னி அரிசி - 200 கிராம்
மாங்காய் - 200 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - ¾ டீஸ்பூன்
வெந்தயம் - ½ டீஸ்பூன்
கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
வறுத்த வேர்கடலை -3 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயப் பொடி - 2 சிட்டிகை
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
முதலில், அரிசியை வேகவைத்து சாதமாக வடித்து, உதிரி உதிரியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். சாதம் குழைந்துவிடக்கூடாது. அடுத்து, மாங்காயை தோல் நீக்கி, துருவி எடுத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து, மாங்காய் சாதத்துக்கு தேவையான மசாலா பொடியை தயார் செய்ய வேண்டும். அதற்கு கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைக்கவும். பாத்திரம் சூடாகியதும் சீரகம், வெந்தயம், மிளகு சேர்த்து நன்கு வறுக்கவும். சிவக்க வறுத்தால்போதும், கரிந்துவிடக்கூடாது. பின்னர், அதை ஆற வைத்து பொடியாக திரித்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து, அடுப்பில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, பாத்திரம் சூடானவுடன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடாகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொறியவிடவும். நன்கு பொறிந்த உடன் 2 கொத்து கறிவேப்பிலை, வறுத்த வேர்க்கடலை, உடைத்த முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். நன்கு வறுபட்டவுடன், பச்சை மிளகாயை இரண்டாக கீறி சேர்க்கவும். தொடர்ந்து, காய்ந்த மிளகாயையும் போடவும். நன்கு வறுத்துக் கொண்டே பெருங்காய தூளை சேர்க்கவும். அதன்பிறகு, துருவிவைத்த மாங்காயை சேர்க்கவும். ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து, வடித்து உதிரி உதிரியாக எடுத்துவைத்துள்ள சாதத்தை சேர்க்கவும். வறுத்து திரித்து வைத்த மசாலா பொடியையும் சேர்க்கவும். சாதத்தில் எல்லா இடங்களிலும் மசாலா படும் அளவுக்கு நன்கு களந்துவிடவும். உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும். சுவையான, மனமான மாங்காய் சாதம் ரெடி. பள்ளி செல்லும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.