இந்தியாவில் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது சபாரி மற்றும் ஹாரியர் மாடல் எஸ்.யு.வி. கார்களாகும். இதில் தற்போது எக்ஸ்.டி.ஏ. பிளஸ் வேரியன்ட் கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 6 ஆட்டோமேடிக் கியர் வசதி, மேற்கூரை திறந்து மூடும் அம்சம் உள்ளிட்ட வசதிகளோடு வந்துள்ளது. எஸ்.யு.வி. சந்தையில் ஹாரியர் மற்றும் சபாரி கார்களின் விற்பனை பங்களிப்பு 41.2 சதவீதமாக உள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள எக்ஸ்.டி.ஏ. பிளஸ் மாடலால் இவற்றின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில் கிரையோடெக் 2.0 டீசல் என்ஜின் உள்ளது. புரொஜெக்டர் முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்கு, அலாய் சக்கரம், 7 அங்குல தொடு திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இயங்குதளம் கொண்டது. முழுவதும் தானியங்கி அடிப்படையிலான குளிர் சாதன வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, மழை உணர் வைபர் சென்சார், குரூயிஸ் கண்ட்ரோல், டயர் காற்றழுத்த கண்காணிப்பு வசதி, முன்புறம் இரண்டு ஏர்பேக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. லேண்ட் ரோவர் தயாரிக்கப்படும் டி 8 உற்பத்தி மேடையில் இந்த இரண்டு மாடலும் தயாரிக்கப்படுகிறது.