சிறப்புக் கட்டுரைகள்

இன்டர்நெட் இல்லாத தேசம்!

இன்டர்நெட் யுகம் என்று வர்ணிக்கப்படுகிறது இந்தக் காலம். பல்வேறு தொழில்நுட்பம் வளர்ந்த ஒரு நாட்டில் மக்களுக்கு இன்டர்நெட் என்றால் என்னவென்றே தெரியாது என்றால் நம்புவீர்களா? ஆம், வடகொரியா நாட்டு மக்கள் இன்டர் நெட் பயன்படுத்தத் தடை இருப்பதால், அவர்களுக்கு செல்பி எடுத்துப் பகிர்வது, மியூசிக்கலியில் வேடிக்கை காட்டுவதெல்லாம் தெரியாது.

வட கொரியா, அணுஆயுத போட்டியால் உலக நாடுகளை அதிர வைக்கும் நாடாக திகழ்கிறது. அமெரிக்காவையும் எதிர்க்கும் துணிவினால் பல்வேறு பொருளாதார தடைகளையும், இன்னும் அரசியல் ரீதியான இடையூறுகளையும் எதிர்கொண்டு வருகிறது. அணுசக்தி உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் அவ்வளவு வளர்ச்சி கண்டிருந்தாலும் அந்த நாட்டு மக்களுக்கு இணையதளம் என்றால் என்னவென்றே தெரியாது என்பதுதான் உண்மை. காரணம் அங்கே பொதுமக்கள் இணையதளத்தை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

ஒரே ஒரு நிறுவனத்திற்குத்தான் இன்டர்நெட் சேவை வழங்கும் அதிகாரம் உள்ளது. அரசு அதிகாரிகள் மட்டுமே இணைய தளத்தை பயன்படுத்த முடியும். மொத்தம் 1024 ஐ.பி. முகவரி கணினிகளில் மட்டுமே இணைய இணைப்புக்கான அனுமதி உள்ளது. வெளிநாட்டில் இருந்து ஒரு சுற்றுலாப் பயணி சென்றால்கூட இன்டர்நெட் பயன்படுத்த முடியாது. அப்படி பயன் படுத்த விரும்பினால் அதற்கு தனியே அனுமதி பெற வேண்டும். அம்மாடியோவ்...!