சிறப்புக் கட்டுரைகள்

நெதர்லாந்தில் மக்கள் தொகையை விட சைக்கிள் அதிகம்

உலகிலேயே அதிக அளவில் சைக்கிள்கள் பயன்படுத்தும் நாடுகளில் நெதர்லாந்து முதல் இடத்தில் உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்ததும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிப்பதும் சைக்கிள். உலகம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பல நாடுகள் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. அந்த வகையில், உலகிலேயே அதிக அளவில் சைக்கிள் பயன்படுத்தும் நாடாக நெதர்லாந்து திகழ்கிறது.

நெதர்லாந்து

மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மிக அழகான நாடு நெதர்லாந்து. உலகிலேயே அதிக அளவில் சைக்கிள்கள் பயன்படுத்தும் நாடுகளில் நெதர்லாந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு கார்களை விட சைக்கிள்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்நாட்டு மக்கள் தொகையை விட (1 கோடியே 84 லட்சம்) அதிக எண்ணிக்கையிலான சைக்கிள்கள் (2 கோடியே 30 லட்சம்) உள்ளன.

பாதுகாப்பான சைக்கிள் பாதைகள் மற்றும் பிரத்யேக போக்குவரத்து சமிக்ஞைகள் அமைக்கப்பட்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம். இதற்கு அடுத்து டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன் உலகின் மிகச்சிறந்த சைக்கிள் நகரமாக கருதப்படுகிறது.

சுமார் 62 சதவீத மக்கள் தங்கள் தினசரி அலுவலக பயணங்களுக்கு சைக்கிளை பயன்படுத்துகின்றனர். ஜெர்மனி, ஐரோப்பாவில் அதிக சைக்கிள் பயன்பாட்டை கொண்ட நாடுகளில் ஒன்று. இங்குள்ள மக்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமானோர் சைக்கிளையே பிரதானமாக நம்பியுள்ளனர்.

ஜப்பான்,சீனா

மேலும் ஆசியாவிலேயே ஜப்பானில்தான் சைக்கிள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக டோக்கியோ, ஒசாகா போன்ற பெரு நகரங்களில் பள்ளி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் என பலரும் தினமும் சைக்கிளையே உபயோகிக்கிறார்கள். சீனாவிலும் கோடிக்கணக்கானோர் சைக்கிள் பயன் படுத்துகிறார்கள்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், எரிபொருள் செலவைக் குறைப்பதற்கும், உடல் நலத்தை மேம்படுத்துவதற்கும் சைக்கிள் பயன்பாடு மிக முக்கியமானதாகும். நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் சைக்கிளுக்கு முன்னுரிமை அளித்து, நிலையான போக்குவரத்து முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.