உடலில் பல நோய்கள் குடிகொள்ளும்போது ஏராளமான மருந்துகள் சாப்பிடுவது நோயாளிகளின் வாழ்க்கையையே கசப்பான அனுபவமாக மாற்றிவிடுகிறது. இதற்கு மாற்றாக ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல நோய்களுக்கு ஒரே மருந்தை உருவாக்க மருத்துவ உலகம் போராடி வருகிறது.
தற்போது மாரடைப்பு, இதய செயலிழப்பு, முடக்குவாதம், லோ கொலஸ்ட்டிரால் போன்ற தீவிர பாதிப்புகளை உருவாக்கும் நோய்களுக்கு 4 மருந்துகளை ஒன்றிணைத்து ஒரே மருந்தை தயாரித்துள்ளது டெய்லி பில் எனப்படும் மருந்து ஆராய்ச்சி நிறுவனம்.
ரத்த அழுத்தத்துக்கான 2 மருந்துகள், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் மருந்து மற்றும் வலிநிவாரணியான ஆஸ்பிரின் ஆகியவை கலந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக லோ கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்திற்கு ஒரே மருந்தை தயாரிக்க இந்தியாவில் பரிசோதனை ஆய்வுகள் நடந்தன. தற்போது மாரடைப்பு மற்றும் முடக்கு வாதத்திற்கான மருந்துகளையும் ஒன்றிணைத்து புதிய மருந்தை உருவாக்கும் முயற்சி லண்டனில் நடந்தது. இந்த மருந்தை ஈரானில் சுமார் 7 ஆயிரம் இதய நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில் 70 சதவீத அளவில் இதய நோய் தாக்குதல் தடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பிர்மிங்காம் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து இந்த அதிசய மருந்தை உருவாக்கி உள்ளனர். இதற்கு பாலிபில் என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஒரே மருந்தாக இருப்பது மருந்தின் விலைக் குறைவுக்கும், நோயாளிகளின் சிரமத்தையும், பெரிதும் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.