சிறப்புக் கட்டுரைகள்

இதய துடிப்பால் நீளும் ஆமைகளின் ஆயுள்

240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஆமைகள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆமைகளின் மேல் ஓட்டின் மீதுள்ள வரைவுகளை வைத்தே அதனை இனம் பிரிக்கிறார்கள்.

ஆமைகள் நீண்ட ஆயுளைக் கொண்டவை. இவற்றின் இதயம் மிகவும் நிதானமாகத் துடிப்பதுதான், அதிகமான ஆயுளுக்கு காரணம் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கடல் ஆமை வகைகள் இருக்கின்றன. அதில் இந்தியக் கடல் பகுதிகளில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமை வகைகள் காணப்படுகின்றன.

கடல் ஆமையின் ஓடுகள், பல அடுக்கு கொண்ட எலும்பு தட்டுகள் மற்றும் கொம்புகளால் ஆன கவசம் போன்றது. இது எதையும் தாங்கும் வலிமை கொண்டது. ஓட்டில் இருக்கும் நரம்புகளின் வாயிலாகத்தான், ஆமைகள் உணர்வு திறனைப் பெறுகின்றன.

கடல் ஆமையானது, ஒரே சமயத்தில் 100 முதல் 150 முட்டைகள் வரை இடும். பின்னர் குழியை மூடிவிட்டு, கடலுக்குள் சென்றுவிடும். சூரிய வெப்பத்தால் மணல் சூடாகும்போது, இயற்கையாகவே அடைகாக்கப்பட்டு, 60 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும்.

வடகிழக்கு அமெரிக்காவில்தான், உலகிலேயே மிகச்சிறிய ஆமையாகக் கருதப்படும் 'ஸ்டிங்காட்' இனம் காணப்படுகிறது. இதன் நீளம் 110 மி.மீ. மட்டுமே. இந்தியாவில் பேராமை, சிற்றாமை, அழுங்காமை, தோணியாமை, பெருந்தலைக் கடலாமை ஆகிய 5 இனங்கள் அருகிவரும் இனங்களாக கண்டறியப்பட்டுள்ளன. 'பேராமை' இனத்தை 'ஏழு வரி ஆமை' என்றும் அழைப்பார்கள்.

கடற்பாசிகளையும், கடற் தாவரங்களையும் சில கடல் ஆமைகள் உட்கொள்கின்றன. இன்னும் சில ஆமைகள், ஜெல்லி மீன்கள் உள்ளிட்ட சிறிய மெல்லுடல் கொண்ட மீன்களை சாப்பிடுகின்றன.