நியூயார்க்
இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த பல மாதங்களாக கடுமையான வரிகளை விதித்து வருகிறார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல அதிரடி உத்தரவுகளை வெளியிட்டார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தினார். அமெரிக்காவை வளம் நிறைந்த நாடாக மாற்றுவேன் என உறுதி பூண்டார். இதற்காக பல நாடுகளுக்கு வரிகளை விதித்து அமல்படுத்தினார்.
இதனால், அமெரிக்காவின் கஜானா நிரம்பி வருகிறது என சக உறுப்பினர்களிடம் கூட்டமொன்றில் பெருமையாக பேசினார். இதில், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவுக்கு எதிராக பல மாதங்களாக அவர் கடுமையான வரிகளை விதித்து வருகிறார். சமீபத்தில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்க கூடிய இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக கடுமையான வரிகளை விதிப்பதற்கான சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
கடந்த காலத்தில் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்த வரி தொடர்பான தகவல் தொகுப்பை காண்போம்.
ஏப்ரல் 2, 2025:
இந்த நாளை விடுதலை நாள் என அறிவித்து, பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரிகளை விதித்து உத்தரவிட்டார். இந்தியாவில் 26 சதவீதம் என்ற அளவில் இது இருந்தது. (இதில், 10 சதவீதம் அடிப்படை வரியும், 16 சதவீதம் பரஸ்பர வரியும் விதிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை நிலையான இறக்குமதி வரிகளே விதிக்கப்பட்டு இருந்தது.
ஏப்ரல் 9, 2025:
16 சதவீதம் பரஸ்பர வரி 90 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. ஆனால், 10 சதவீதம் வரி தொடர்ந்து அமலானது.
ஜூலை 31, 2025:
ஆகஸ்டு 7, 2025 காலை 9.30 மணி முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது. அதற்கு முன்பு வரை கடந்த 2025-ம் ஆண்டின் ஏப்ரல் 2 முதல் ஆகஸ்டு 6 வரை 10 சதவீத கூடுதல் வரி மட்டுமே அமலில் இருந்தது.
ஆகஸ்டு 6, 2025:
ரஷிய எண்ணெய் கொள்முதலுக்காக இந்தியாவுக்கு அபராதம் விதிக்கும் வகையில் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதனால், இந்திய பொருட்களுக்கான மொத்த வரி 50 சதவீதம் என உயர்ந்தது.
ஆகஸ்டு 27, 2025:
இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தையில், 50 சதவீதம் (25 சதவீதம் பரஸ்பர வரி மற்றும் 25 சதவீதம் ரஷிய எண்ணெய் வரி) கூடுதல் வரிகளை எதிர்கொள்ளும்.
பிப்ரவரி 2, 2026:
இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்திய பொருட்களின் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்படும். எனினும், 18 சதவீத வரி நடைமுறைக்கு வரவே இல்லை.
பிப்ரவரி 6, 2026:
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கான கட்டமைப்பை ஏற்றுக்கொண்டோம் என்று இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
பிப்ரவரி 7, 2026:
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25 சதவீத வரியை அமெரிக்கா திரும்ப பெற்றது.
பிப்ரவரி 20, 2026:
பரஸ்பர வரி முறையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. இதனால், அன்று முதல் இந்திய பொருட்கள் மீது மீண்டும் 'மிகவும் விரும்பப்படும் நாடு' என்ற அந்தஸ்து அடிப்படையிலான வரிகள் மட்டுமே அமலில் இருந்தன.
பிப்ரவரி 24, 2026:
இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் 10 சதவீத உலகளாவிய வரி முறையை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது (இதன்படி 10 சதவீதம் + மிகவும் விரும்பப்படும் நாடுகளுக்கு விதித்த வரி). இது 150 நாட்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது.
ஜூலை 24, 2026:
உலகளாவிய வரி நடைமுறை முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில், கட்டாய உழைப்பு தொடர்பான விஷயங்களை காரணம் காட்டி, பிரிவு 301-ன் கீழ் இந்தியா மீது 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது.
இதன் மூலம், உலகளாவிய வரி என்ற நிலையிலிருந்து மாறி, இந்தியா மீது மட்டும் குறிவைக்கப்பட்ட வரியாக இது மாறியது. எனினும், இதில் அடங்கும் பெரும்பாலான ஏற்றுமதி பொருட்களுக்கான நடைமுறை வரி விகிதம் மிகவும் விரும்பப்படும் நாடுகளுக்கான வரி + 10 சதவீதம் என்ற அளவிலேயே நீடித்தது.
செப்டம்பர் 18, 2026:
ரஷியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு எதிரான தடை சட்டத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இச்சட்டம், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ரஷிய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை சுங்க வரி விதிக்க அவருக்கு அதிகாரம் அளிக்கிறது.
சில குறிப்பிட்ட பொருட்களை தவிர இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு, பிரிவு 301-ன் கீழான வரி (10 சதவீதம்) பொருந்தும்.
இது தவிர, துறை சார்ந்த வரிகளும் உள்ளன. இதன்படி, எக்கு மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு 50 சதவீதம், வாகன உதிரிபாகங்களுக்கு 25 சதவீதம் வரிகள் இருக்கும்.
எனினும், ஸ்மார்ட்போன்கள், மருந்துகள் மற்றும் எரிசக்தி பொருட்கள் ஆகியவற்றிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒரு சட்டைக்கு அமெரிக்காவில், மிகவும் விரும்பப்படும் நாடுகளுக்கான 5 சதவீத வரி விதிக்கப்பட்டால், தற்போது அதற்கான மொத்த வரி என்பது 5 சதவீதம் மற்றும் கூடுதல் 10 சதவீதம் (பிரிவு 301-ன் கீழ் விதிக்கப்பட்டது) ஆகியவற்றின் கூட்டுத்தொகையாக இருக்கும். இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது, இதுபோன்ற வரி விதிப்புகளால் தன்னுடைய நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் முயற்சிகளில் அமெரிக்க அரசு ஈடுபட்டு வருவது தெரிகிறது.