உலகிலேயே முழுமையான 'வெஜிடேரியன் நகரம்' என்று அழைக்கப்படுவது குஜராத்தில் உள்ள பாலிதானா.
சமண மதத்தின் மிக முக்கிய புனிதத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நகரில், 2014-ம் ஆண்டு முதல் இறைச்சி. மீன் மற்றும் முட்டை விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான சமணக் கோவில்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியின் புனிதத் தன்மையையும், அகிம்சை கொள்கையையும் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர், பாலிதானா உலகின் முதல் முழு மையான சைவ நகரமாக அறியப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் மற்றொரு புகழ்பெற்ற ஆன்மிக நகரமான வாரணாசியும் அதே பாதையை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. காரணம், நகர எல்லைக்குள் செயல்பட்டு வந்த இறைச்சி, மீன் மற்றும் கோழி விற்பனைக் கடைகளை நகரின் புறநகர் பகுதிகளுக்கு மாற்றும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி, காசி விஸ்வநாதர் கோவில், கங்கை கரை படித்துறைகள் மற்றும் பாரம்பரிய கலாசாரத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படும் நகரமாகும். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில், நகரின் தூய்மை, போக்குவரத்து ஒழுங்கு மற்றும் பக்தர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், நகருக்குள் இயங்கி வந்த சுமார் 350 முதல் 400 இறைச்சி, மீன் மற்றும் கோழி விற்பனைக் கடைகளை பல கட்டங்களாக நகரின் வெளிப்புற பகுதிகளுக்கு மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்தக் கடைகள் ராம்நகர், சுஜாபாத் கணேஷ்பூர், அவலேஷ்பூர் மற்றும் சிவ்பூர் ஆகிய பகுதிகளுக்கு மாற்றப்படவுள்ளன. இந்தப் பணிகளை தீபாவளிக்குள் நிறைவு செய்ய அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.
மோட்சத் தலமாக அறியப்படும் காசிக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அப்படியான நிலையில் அவ்வாறு வருபவர்கள் மன நிறைவுடன் செல்ல இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.