மண்குளவிகள் 
சிறப்புக் கட்டுரைகள்

வீடுகளில் கூடு கட்டும் மண்குளவிகள்! அதிர்ஷ்டமா? ஆபத்தா?

காடுகளில் உள்ள பச்சை புழுக்கள் வேட்டையாடி, தன் கொடுக்குகளால் கடித்து விஷத்தை செலுத்தி, அவற்றை கொல்லாமல் மயக்கமடைய செய்கிறது.

நமது வீட்டின் ஜன்னல் ஓரங்கள், கதவுகளின் இடுக்கள் மற்றும் பயன்படுத்தாத சுவர்களில் திடீரென களிமண்ணால் ஆன சிறிய நீண்ட வடிவ கூடுகள் தோன்றுவதை நாம் பார்த்திருப்போம். பலரும் ஏதோ பூச்சி என்று சாதாரணமாக கடந்து செல்லும் இந்த மர்ம வீடுகளை கட்டுவது வேறு யாருமல்ல, மண்குளவிகள் தான்.

'இன்ஜினியரிங்' வீடுகள்

மண்குளவிகள் தங்களுக்கென வீடு கட்டுவதில் கைதேர்ந்தவை. வாய்க்கால், தோட்டம் போன்ற ஈரமான இடங்களிலிருந்து களிமண்ணை தன் வாயில் கவ்வி எடுத்து வருகின்றன. பின்னர், தன் எச்சிலை கலந்து, சுவர்களில் அடுக்கடுக்காக மிக உறுதியான நீண்ட குழாய் போன்ற கூடுகளை மிக நேர்த்தியாக கட்டுகின்றன.

மயக்க ஊசி

இது காடுகளில் உள்ள பச்சை புழுக்கள் வேட்டையாடி, தன் கொடுக்குகளால் கடித்து விஷத்தை செலுத்தி, அவற்றை கொல்லாமல் மயக்கமடைய செய்கிறது. அந்த மயங்கிய பூச்சிகளை அப்படியே கவ்விக்கொண்டு வந்து தான் கட்டிய கூட்டுக்குள் அடைக்கிறது.

வாரிசுக்கு உணவு

அதன் மீது தன் முட்டையை இட்டு, கூட்டின் வாசலை மண்ணால் பூசி மூடிவிடுகிறது. முட்டையிலிருந்து வெளிவரும் குளவிக்குஞ்சு, கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும் அந்த புழுக்களை உணவாக சாப்பிட்டு வளர்ந்து, கூட்டை உடைத்து கொண்டு பறக்கிறது.

ஆபத்தானதா?

மண்குளவிகள் பொதுவாக மனிதர்களை தேடி வந்து கொட்டுவதில்லை. மிகவும் சாதுவான இந்த பூச்சிகள், நாம் அவற்றை துன்புறுத்தினால் அல்லது அச்சுறுத்தலாக உணர்ந்தால் மட்டுமே அரிதாக கொட்டும். தேனீக்கள் அளவுக்கு இதனிடம் கடுமையான விஷம் கிடையாது என்பதால், இதனால் மனிதர்களுக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லை.

பண வரவு

தமிழ் கலாச்சாரத்திலும், ஆன்மீகத்திலும் மண்குளவிக்கு மிக முக்கிய இடம் உண்டு. வீட்டில் குளவி கூடு கட்டினால் அந்த வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் பெருகும் என்றும், தடைபட்ட பண வரவுகள் தேடி வரும் என்றும் நம்பப்படுகிறது.

வீட்டில் நல்ல காரியங்கள் நடக்க போவதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாகவே இன்றும் கிராமங்களில் குளவி கூடுகள் பார்க்கப்படுகின்றன. தோட்டத்து பூச்சிகளை வேட்டையாடி விவசாயத்திற்கு நன்மை செய்கிறது.