சிறப்புக் கட்டுரைகள்

2030-ம் ஆண்டில் அலுவலகங்கள் எப்படி இருக்கும்?

ஏ.ஐ. அமைப்புகள் பழுது ஏற்படும் முன்பே கணித்து தெரிவிக்கும்.

ஒரு அலுவலகத்தில் உங்கள் பக்கத்தில் ஹியூமனாய்ட் ரோபோ அமர்ந்து வேலை பார்க்கிறது. மின்னஞ்சல்கள், அறிக்கைகள் போன்றவற்றை ஏ.ஐ. மூலம் நொடிகளில் தயார் செய்து விடுகிறது. இது கற்பனைக்கதை அல்ல. மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு, 2030-ம் ஆண்டுக்குள் அலுவலகங்களின் செயல்பாடுகள் இப்படியாக மாறக்கூடும் எனக் காட்டுகிறது.

ஏ.ஐ. ஏஜெண்ட்கள்

ஏஜெண்ட்ஸ், ரோபோட்ஸ் மற்றும் நாம் என்ற தலைப்பில் வெளியான இந்த ஆய்வு, மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான போட்டி காலம் முடிந்து. கூட்டுச் செயல்பாட்டின் காலம் தொடங்கியிருக்கிறது என்பதை வலியுறுத்துகிறது. எதிர்கால பணியிடங்களில் மனிதர்கள், ஏ.ஐ. ஏஜெண்ட்கள் மற்றும் ரோபோக்கள் இணைந்து செயல்படுவார்கள். தினசரி பணிகள் கூட, இந்த மூன்றின் ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்டதாக மாறும்.

இந்த மாற்றத்தை நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்தினால், 2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு மட்டும் கூடுதலாக 2.9 டிரில்லியன் டாலர் வருமானம் சேர்க்க முடியும் என மதிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த புதிய பணிமுறைக்கு நிறுவனங்கள் எவ்வளவு விரைவாக தங்களைத் தயார் செய்கின்றன என்பது மிக முக்கியம்.

பிராம்ப்டிங் திறன்

எதிர்காலத்தில், வெறும் வேலை செய்வது மட்டும் போதாது. இயந்திரங்களுக்கு சரியான அறிவுறுத்தல்களை வழங்கும் 'பிராம்ப்டிங் திறன் மிகப் பெரிய முக்கியத்துவம் பெறும். இது ஒரு புதிய உலகளாவிய பணியிட மொழியாக உருவெடுக்கும் நிலையில் உள்ளது.

மனிதர்கள் பங்கு குறையும்

மேலும், அபாயம் நிறைந்த பணிகளில் மனிதர்களின் பங்கு குறையும். கடினமான நிலப்பரப்புகளில் ஆய்வு செய்வது போன்ற பணிகளை டிரோன்கள் மற்றும் ரோபோக்கள் மேற்கொள்ளும். ஏ.ஐ. அமைப்புகள் பழுது ஏற்படும் முன்பே கணித்து தெரிவிக்கும். மனிதர்கள் மேற் பார்வை மற்றும் முடிவெடுக்கும் பணிகளில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

'ஏ.ஐ. புலமை'

சில்லறை விற்பனை துறையிலும் பெரிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. கனமான பொருட்களை தூக்கும் வேலைகள், சரக்கு மேலாண்மை போன்றவை முழுமையாக தானியக்கமாக்கப்படும். அதே நேரத்தில், மனிதர்கள் வாடிக்கையாளர் சேவை, அனுபவ மேம்பாடு மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.

இந்த மாற்றங்களின் மையத்தில் 'ஏ.ஐ. புலமை' (Al literacy) முக்கிய இடத்தைப் பெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தத் திறனுக்கான தேவை ஏழு மடங்கு உயர்ந்துள்ளது. ஏ.ஐ.யுடன் இணைந்து செயல்படக் கூடியவர்கள். அதனை சரியாக வழிநடத்தக் கூடியவர்கள் தான் எதிர்காலத்தில் அதிக வாய்ப்புகளையும், உயர்ந்த சம்பளங்களையும் பெறுவார்கள்.

இயந்திரங்களின் வேகத்தையும், மனிதர்களின் சிந்தனைத் திறனையும் இணைத்து செயல்படுபவர்களே, 2030-ம் ஆண்டின் பணியிட உலகில் உண்மையான 'சூப்பர் ஸ்டார்' ஆக மாறுவார்கள்.