சிறப்புக் கட்டுரைகள்

அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையில் இருந்து வெளியேறும் ஒன்பிளஸ் - காரணம் என்ன?

ஒன் பிளஸ் செல்போன்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

வாஷிங்டன்,

உலகின் முன்னணி செல்போன் நிறுவனங்களில் ஒன்று சீனாவின் பிபிகே எலக்ட்ரானிக்ஸ். இந்நிறுவனம் ஒப்போ செல்போன்களை தயாரித்து வருகிறது. மேலும், ஒப்போ செல்போன் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக ஒன் பிளஸ் செல்போன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஒன்பிளஸ் செல்போன்கள்

ஒன் பிளஸ் செல்போன்கள், டேப்லெட்கள் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒன் பிளஸ் செல்போன்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஆக்சிஜன் ஓஎஸ்

ஆக்சிஜன் ஓஎஸ் சாப்ட்வேர் மூலம் இயக்கும் இந்த செல்போன்கள் இந்திய வாடிக்கையாளர்களின் 20 முதல் 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் பல்வேறு செல்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. மேலும், 40 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான பிளாக்‌ஷிப் வகை செல்போன்களையும் ஒன் பிளஸ் விற்பனை செய்து வருகிறது.

விற்பனை நிறுத்தம்

இந்நிலையில், அமெரிக்கா, ஐரோப்பாவில் செல்போன், டேப்லெட் விற்பனை மற்றும் செயல்பாட்டை நிறுத்துவதாக ஒன் பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிதாக தயாரிக்கப்படும் ஒன் பிளஸ் செல்போன்கள் ஆக்சிஜன் ஓஎஸ் சாப்ட்வேரில் இயங்காது என்றும், புதிய செல்போன்கள் கலர் ஓஎஸ் சாப்ட்வேரில் செயல்படும் என்றும் ஒன் பிளஸ் அறிவித்துள்ளது. தாய் நிறுவனமான ஒப்போ நிறுவனத்தின் செல்போன்கள் அனைத்தும் கலர் ஓஎஸ் சாப்ட்வேரில் செயல்பட்டு வரும் நிலையில் அதே ஓஎஸ்-ல் ஒன்பிளஸ் செல்போன்கள் இனி தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

விற்பனை குறைவு, போட்டி அதிகரிப்பு, செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவதாக ஒன் பிளஸ் அறிவித்துள்ளது.

அதேபோல், தாய் நிறுவனமான ஒப்போ ஏற்கனவே கலர் ஓஎஸ் சாப்ட்வேரில் இயங்கும் நிலையில் ஒன் பிளஸ் செல்போன்களுக்கு ஆக்சிஜன் ஓஎஸ் சாப்ட்வேர் மூலம் இயக்கப்படுவது செலவுகளை அதிகரித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் ஓஎஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கு ஏற்படும் கூடுதல் செலவுகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக இனி தயாரிக்கப்படும் அனைத்து ஒன் பிளஸ் செல்போன்களும் கலர் ஓஎஸ் சாப்ட்வேரில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, இந்தியாவில் தொடரும் விற்பனை

ஐரோப்பா, அமெரிக்க சந்தையில் விற்பனையை நிறுத்தியபோதும் சீனா, இந்தியாவில் ஒன் பிளஸ் செல்போன்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, புதிய ஒன் பிளஸ் செல்போன்கள் இனி கலர் ஓஎஸ் சாப்ட்வேரிலேயே இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே விற்பனையான செல்போன்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஆக்சிஜன் ஓஎஸ் சாப்ட்வேர் அப்டேட்கள் வழங்கப்படும் என்றும் ஒன் பிளஸ் அறிவித்துள்ளது.

செல்போன்கள் விற்பனை, சேவை நிறுத்தப்படுவதாக ஒன் பிளஸ் அறிவித்துள்ள நிகழ்வு அமெரிக்க, ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.