புதுடெல்லி,
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ள மத்திய அரசு, அந்த மாநிலத்தையும் 2 ஆக பிரிக்கிறது. இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
எனினும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிர்ஆதித்ய சிந்தியா, இந்த நடவடிக்கைகளை ஆதரித்து உள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், காஷ்மீர் பிரிவினை மற்றும் இந்தியாவுடன் அதன் ஒருங்கிணைப்பு ஆகிய நடவடிக்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த விவகாரத்தில் அரசியல்சாசன வழிமுறைகளை பின்பற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவ்வாறு செய்திருந்தால் கேள்வியே எழுந்திருக்காது. இருப்பினும் நாட்டு நலன்கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிந்தியா, மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்து இருப்பதன் மூலம் காங்கிரசில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரை தவிர மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஜனார்தன் திவேதி, தீபேந்தர் ஹூடா, மிலிந்த் தியோரா, ரேபரேலியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங் உள்ளிட்டோரும் காஷ்மீர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.