காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச சுவாமிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி திருச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தொண்டை மண்டல முதலியார் சமூக மக்கள் மற்றும் திருச்சி மடத்தின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஞானப்பிரகாச சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் 230-வது மடாதிபதியின் அனுக்க சிஷ்யனாக இருந்த காரணத்தினால், இந்த திருமடத்தின் 233-வது மடாதிபதியாக வருவதற்காக எனது விருப்ப மனுவை திருமடத்தின் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்து இருந்தேன். அதன் அடிப்படையில் சென்னையில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற திருமடத்தின் சீடர்களின் கூட்டத்தில் நான் 233-வது மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டேன். என் மீது மடத்தின் சீடர்கள் நம்பிக்கை வைத்து என்னை தேர்வு செய்ததற்காக, என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடத்தி வந்தேன். இந்தநிலையில் எனக்கு சிறிது காலமாக உடல் நிலை சரியில்லாமல் போனதாலும், டாக்டர்களின் ஆலோசனை படியும், என் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் முழு ஓய்வு எடுக்க இருப்பதால் நான் மடாதிபதி பதவியிலிருந்து விலகிவிட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து 234-வது மடாதிபதியாக திருமடத்தின் சீடர்கள் விண்ணப்பித்து, மடத்தின் ஆலோசனைக்குழு மூலம் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆலோசனை குழு தலைவர் விஜயராஜன் தெரிவித்தார்.