செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள 4-வது வார்டு சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு 4-வது வார்டு அ.தி.மு.க. நகர மன்ற கவுன்சிலர் சி.தங்கராசு தலைமை தாங்கினார். அ.தி.மு.க. நகர மன்ற கவுன்சிலர்கள் எஸ்.டி.பிரசாத், ஆர்.கலைச்செல்வன், சே.நாகேந்திரன், ஹேமலதா வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், நகர மன்ற துணைத் தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், தெருவிளக்குகள் அமைத்து தந்த வார்டு உறுப்பினர் தங்கராசுக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள். மேலும் கால்வாய்கள் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு நகர மன்ற தலைவர் படிப்படியாக உங்கள் வார்டில் உள்ள குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். இதில் நகராட்சி குடிநீர் பணியாளர் கமலக்கண்ணன் மற்றும் 4-வது வார்டு குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.