விருதுநகர்,
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த 3 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
“இத்தனை காலமாக ஆண்கள் மட்டுமே நிர்வகித்து வந்த தொழில்துறையை முதல் முறையாக ஒரு பெண்ணை நம்பி, எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்பதை த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே நாம் சொல்லியிருக்கிறோம். அதற்கு தேவையான முயற்சிகளையும் நாம் செய்தோம்.
நமது முயற்சிகள் குறித்து எத்தனையோ பேர் ஏளனமாக பேசினார்கள், கேலி செய்தார்கள். ஆனால் அனைத்தையும் தாண்டி 3 மாதங்களில் ‘வெற்றி தமிழ்நாடு’ என்ற பெரிய முதலீடாக, ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.1,500 கோடியில் 2 நிறுவனங்கள் வரப்போகின்றன. படித்த இளைஞர்களுக்கு வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் வரை சம்பளம் வழங்கக் கூடிய பெரு நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரப்போகின்றன.
அதுவும் விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு இத்தகைய வேலைவாய்ப்புகளை கொண்டு வர வேண்டும் என்பதுதான் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் கனவு. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், ‘மக்களுக்காக நான் வேலை செய்ய வந்திருக்கிறேன்’ என்ற உறுதியோடு முதல்-அமைச்சர் விஜய் அமைதியாக வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அவரை பின்பற்றியே நானும் செயலாற்றி வருகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.