திண்டுக்கல்:
வாகன சோதனை
திண்டுக்கல் பகுதியில் நிலையான கூர்ந்தாய்வு குழுவை சேர்ந்த ஜாபிர் அகமது தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நேருஜிநகர் பகுதி வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில் அந்த காரில் ஒரு பையில் ரூ.8 லட்சத்து 97 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 40) என்பதும், ரெட்டியார்சத்திரம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருவதும், அங்கு வசூலான ரூ.8 லட்சத்து 97 ஆயிரத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.
ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திரும்ப ஒப்படைப்பு
பின்னர் அந்த பணத்தை மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
மேலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பணத்தை பெற்றுச்செல்லும்படி வெங்கடேசனிடம் தெரிவித்தனர்.
அதன்படி சிறிது நேரத்தில் தாசில்தார் அலுவலகத்துக்கு உரிய ஆவணங்களுடன் வெங்கடேசன் வந்தார்.
அவர் கொண்டு வந்த ஆவணங்களை சரிபார்த்த பறக்கும் படை அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மேற்கு தாசில்தார் அபுரிஸ்வான் முன்னிலையில் ரூ.8 லட்சத்து 97 ஆயிரத்தை வெங்கடேசனிடம் திரும்ப ஒப்படைத்தனர்.
இதேபோல் திண்டுக்கல் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருசாமி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் நாகல்நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஒரு பையில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர், வாழைக்காய்பட்டியை சேர்ந்த வெங்காய வியாபாரியான சரோம்டேவி (35) என்பதும், அந்த பணம் வெங்காயம் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்தது என்பதும் தெரியவந்தது.
ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் திண்டுக்கல் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.