தமிழக செய்திகள்

ஓடும் லாரியில் பூட்டை உடைத்து 10 மடிக்கணினிகள் திருட்டு

லாரியின் கன்டெய்னர் பூட்டு உடைக்கப்பட்டதாக சென்சார் மூலம் மினிலாரி உரிமையாளர் செல்போனுக்கு தகவல் சென்றது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் ஓடும் லாரியில் 10 மடிக்கணினிகள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து தனியார் கூரியர் நிறுவனம் மூலம், செல்போன்கள், மடிக்கணினிகள், டி.வி.க்கள், கார் மற்றும் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொச்சி நோக்கி கன்டெய்னருடன் கூடிய மினிலாரி ஒன்று புறப்பட் டது. இந்த மினிலாரியை திண்டுக்கல்லை சேர்ந்த கோட்டை பெருமாள் மகன் தங்கராசு (வயது 26) என்பவர் ஓட்டினார்.

சென்சார்

இந்த மினிலாரி கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூர் சுங்கச்சாவடியை கடந்து வந்து கொண்டிருந்தபோது, லாரியின் கன்டெய்னர் பூட்டு உடைக்கப்பட்டதாக சென்சார் மூலம் மினிலாரி உரிமையாளர் செல்போனுக்கு தகவல் சென்றது.

இதையடுத்து மினிலாரி உரிமையாளர் டிரைவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். உடனே டிரைவர் தங்கராசு, மினிலாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்று பார்த்துள்ளார். அப்போது கன்டெய்னர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுடன், உள்ளே வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.

விசாரணை

இதையடுத்து டிரைவர் தங்கராசு, தன்னிடம் இருந்த மற்றொரு பூட்டை எடுத்து கன்டெய்னரை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு மினிலாரியை எடுத்து வந்தார். பின்னர் போலீஸ் நிலையம் வந்து பார்த்தபோது. தங்கராசு போட்டிருந்த பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் மற்றும் தனியார் கூரியர் நிறுவனத்தினர் மினிலாரியில் இருந்த பொருட்களை கீழே இறக்கி சோதனை செய்தனர்.

அதில் 10 மடிக்கணினிகளை காணவில்லை. மாடூர் சுங்கச்சாவடியை கடந்து மினிலாரி வந்த போது, அதில் மர்ம நபர்கள் ஏறி மடிக்கணினிகளை திருடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருப்பினும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.