தமிழக செய்திகள்

சென்னை விமான நிலைய 3-வது முனையத்தில் இணைப்பு விமான பயணிகள் வசதிக்காக 10 நவீன ஓய்வறைகள்

போதுமான ஓய்வறை வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலே சியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகிறது. இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள், 'டிரான்சிட்' பயணிகளாக சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக இணைப்பு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் இவர்கள், 12 மணி நேரத்துக்கும் மேலாக விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்ப டுகிறது. ஆனால் தற்போது சென்னை விமான நிலையத்தில் இவர்களுக்கு போதுமான ஓய்வறை வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே இந்த பயணிகளுக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி புதிதாக கட்டப்பட்டு வரும் 3-வது முனையத்தில் முதல்கட்டமாக 10 நவீன ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளன. நட்சத்திர ஓட்டலுக்கு இணையான வசதிகளுடன் இந்த ஓய்வறைகள் வடிவமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய வளாகத்துக்குள் நட்சத்திர ஓட்டல் அமைக்கும் திட்டம் பாதுகாப்பு காரணங்களால் கைவிடப்பட்ட நிலை யில், அதற்கு மாற்றாக இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து எதிர்காலத்தில் கூடுதல் ஓய்வறைகளும் அமைக்கப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.